திங்கள், 7 டிசம்பர், 2015

இலக்கை அறிந்த ஈட்டி : மகாராசனின் 'கீழிருந்து எழுகின்ற வரலாறு’ நூல் குறித்த மதிப்புரை.

இலக்கை அறிந்த ஈட்டி :
மகாராசனின் 'கீழிருந்து எழுகின்ற வரலாறு’ நூல் குறித்த மதிப்புரை.
பேராசிரியர் சே. கோச்சடை

வரலாற்று உணர்வு வெள்ளையர்களுக்கு இருப்பதைப் போல இந்தியர்களுக்கு, அதிலும் தமிழர்களுக்குக் கிடையாது. ''ஒவ்வொரு மனிதனும் பல பத்தாண்டுகள் வாழ்கிறான். அவன் தன்னைப் பற்றி - தன் குடும்பத்தைப் பற்றி - தன் முன்னோரைப் பற்றி - தான் அறிந்தவற்றைப் பற்றி செய்திகளை ஒரு வரலாறாக பதிவு செய்து வைக்க வேண்டும் என்கிற வரலாற்று உணர்வு தமிழனுக்கு வரவேண்டும்” என்பதை நாடோறும் வற்புறுத்திய நாடறிந்த நல்லறிஞர் சுரதா என்று வே. ஆனைமுத்து அவர்கள் (சிந்தனையாளன் சூலை 2006) குறிப்பிடுவார். இதை நன்கு புரிந்து கொண்ட 'கீழிருந்து எழுகின்ற வரலாறுஃ நூலின் ஆசிரியர் மகாராசன் 'தமிழ்ச் சமூகத்தின் தொடர்ச்சியான வீழ்ச்சிகளுக்குத் தன் வரலாற்றைப் பதிவு செய்யாத மெத்தனப்போக்கும், வரலாற்றைப் பற்றிய போதிய புரிதல் இல்லாமையும் ஒரு காரணம்” என்கிறார். அதன் ஒரு பகுதியாக தமிழக வரலாற்றை எழுதிப் பார்க்கும் முயற்சியாக இந்த நூல் வெளியாகியுள்ளது.

பல்வேறு காலகட்டங்களில் இக்கட்டுரைகள் எழுதப்பட்ட போதிலும் இவற்றை (1) தொல்காப்பிய ஆய்வு (2) எதிர்க் கதையாடல்கள் (3) நவீன கவிதையின் அரசியல் (4) இந்திய தேசியம் பற்றிய பார்வை என்று பிரிக்கலாம்.

ஏடறிந்த வரலாறு எல்லாம் வர்க்கப் போராட்ட வரலாறே என்று 'பொதுவுடைமைக் கட்சி அறிக்கை’ கூறினாலும்கூட, உலகெங்கிலும் எழுதப்பட்டுள்ள வரலாறு ஆளும் வர்க்க வரலாறாகவே உள்ளது. அந்த வரலாறுகூட தமிழ் நாட்டுக்கு இல்லை. கல்வெட்டுகளையும் இலக்கியங்களையும் தொல்பொருள் ஆராய்ச்சியையும் வைத்துக் கொண்டு தமிழக வரலாறு எழுதப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட வரலாறு முதலில் தொல்காப்பியத்தில் தொடங்குகிறது. இரண்டு கட்டுரைகள் தொல்காப்பியத்தை ஆராய்கின்றன. தொல் காப்பியம் இலக்கண நூலாகும். அது வரையில் வழக்கில் இருந்தவற்றைத் தொகுத்து வகைப்படுத்தும் வேலையைத் தொல்காப்பியர் செய்திருக்கிறார். 'இலக்கியம் கண்டதற்கு இலக்கணம்” செய்தார். ஆனால் 'அர்த்த சாஸ்திரம்” எழுதிய கௌடில்யர் அப்படியல்லாமல் வாழ்க்கை நெறிக்கான சட்ட திட்டங்களை அவரே வகுத்தார். எனவே சாணக்கியரைப் பார்க்கிற கண்ணோட் டத்தில் தொல்காப்பியரைப் பார்க்க முடியாது.

'சமூகப் படி நிலைமைகளை’ சாணக்கியர் நியாயப்படுத்தினார்; தொல்காப்பியர் சுட்டிக் காட்டுகிறார்” எனலாம். நூலாசிரியர் குறிப்பிடுவதைப்போல நால் வருணத்திற்கான கருத்தியல்களைத் தொல்காப்பியம் 'உருவாக்கி வைக்கவில்லை. எப்பேர்பட்ட மெய்யியலாரும் எல்லாக் காலத்துக்குமான மெய்யியலைத் தரமுடியாது. அவர்தன் காலத்தை மிஞ்சி ஒரு குறிப்பிட்ட வரம்பு வரையிலேயே சிந்திக்க முடியும். அப்படிச் சிந்திக்கிறபோது, அக்காலத்திய சமூக முரண்பாடுகளில் முற்போக்கு சக்திகளின் பக்கம் அவர் நிற்கிறாரா என்று பார்த்து அவரை எடை போட வேண்டும். சேக்ஸ்பியரின் நாடகங்களை அப்படித்தான் மார்க்ஸ் கண்டு வரவேற்றார்.

தொல் பொதுவுடைமைச் சமூகத்தை விடவும் நில மாண்ய சமூகமும், இதைவிட முதலாளியியமும் முற்போக்கானது என்கிறபோது அந்தப் பொருளில் தான் நாம் கூறுகிறோம். அப்படிப் பார்க்கும்போது எழுத்து, சொல் அதிகாரங்களை அவர் இன்றைய மொழியியல் அடிப்படைகளுக்கும் பெரிதும் பொருந்துமாறு வரையறுத்திருப்பது பாராட்டத்தக்கது. பொருளதிகாரத்தில் அன்றைய சமூக வாழ்க்கையைத் தொகுத்துத் தந்துள்ளார். அதனால்தான் 'என்மனார் புலவர்” என்பதைப் போன்ற கூற்றுகள் சூத்திரங்களில் இடம் பெறுகின்றன. எனவே வரையறைகள் செய்து ஒழுங்கு படுத்துகிற சமுதாயக் கட்டுமானத்தின் மய்யமாகவும், அதிகார அமைப்பாகவும் இலக்கணப் பனுவல்கள் இருந்தன என்பது ஏற்கத்தக்கதன்று.

ஐவகை நில ஒழுக்கத்தைக் கைக்கொண்டு தமிழர் வாழ்ந்த அக்காலத்திலேயே ஆரியக் கலப்பால் நால் வருணப் பாகுபாடு நுழைந்துவிட்டது. இந்த மயக்கம் பொருளதிகாரம் முழுவதும் விரவிக் கிடக்கிறது. இந்த இயல்பை நூலாசிரியர் மிகுச் சிறப்பாக வெளிப்படுத்தி யுள்ளார்.

இருபெரும் வர்க்கங்களாகப் பிளவு பட்டிருந்த தமிழ்ச் சமூகத்தில், ஆளும் வர்க்கத்தின் வாழ்க்கையையும் சமூக மதிப்பீடுகளையும் மட்டுமே தொல்காப்பியம் பதிவு செய்துள்ளது என்பது குறைபாடுதான். 'உயர்ந்தோரையும், அவர்களுடைய வாழ்க்கையையும் வழக்கையும் ஆவணப் படுத்தியுள்ள தொல்காப்பியம் பெரும்பான்மையாக உள்ள உழுதுண்போரை, 'இழிஃசனர் என்று ஒதுக்கியே வைத்துள்ளது. சமணமும் பௌத்தமும் அப்போதே வளர்ச்சியடைந் திருந்தன. அந்தச் சமயங்களின் பகுத்தறிவுக் கண்ணோட் டத்தில், வெளியில் இருந்து செயல்படும் அறியவொண்ணாத ஆற்றலே சமூக இயக்கத்திற்கான காரணம் என்று கூறாமல், அகக் காரணங்களை அலசுகிறது எனலாம். அது போல தொல்காப்பியம் சமூக ஏற்றத் தாழ்விற்குப் பிறப்பை அடிப்படையாகக் கொள்ளவில்லை என்பதை ஆசிரியர் சரியாகக் காட்டுகிறார்.

தொல்காப்பியம் மேல்தள மக்களைப் பற்றிய சிந்தனைகளை மட்டுமே பதிவு செய்துள்ளது. தொல்காப்பியம் காட்டும் பெண்களும் மேல்தட்டு மக்களைச் சார்ந்தவர்களே!

தொல்காப்பியம் காட்டும் சமூகம் அரசுகள் உருவான நிலமானியச் சமூகமாகும். இச்சமூகத்தில் முந்தைய தொல் பொதுவுடைமைச் சமூகத்திலிருந்த தலைமை நிலையை இழந்த பெண்கள் 'மனையுறை மகளிர்” ஆகிவிடடனர். எனவே பெண்களும் ஒடுக்கப்பட்ட பிரிவினர் ஆகிவிட்டனர்.

'நிலம் ஆண்களின் உடைமையாக மாற்றும் மாறுகின்றபோது, பெண்ணும் ஆண்களின் உடைமையாக மாற்றப்பட்டாள்” என்று நூலாசிரியர் மகாராசன் சரியாகவே சுட்டிக் காட்டுகிறார். உற்பத்தி, மறு உற்பத்திக்கான கருவிகளை அடக்கியாளும் அதிகாரம் ஆண்களிடம் சேர்ந்தது. மேல்தட்டு பெண்களைப் பற்றிய சிந்தனைகளைப் பதிவு செய்திருந்த போதிலும், சனநாயக உரிமை உள்ள இக்காலத்தில் சமூகத்தின் அடித்தட்டு மக்களும் மேல்நோக்கி நகரும் போக்கில் இக்கருத்தியல்கள் அடித்தட்டு பெண்களுக்கானவையாகவும் மாற்றப்படுகின்றன. தம்மீதான ஒடுக்கு முறைக்கு எந்தப் பார்ப்பனியம் காரணமாக உள்ளதோ, அந்தப் பார்ப்பனிய சடங்குகளை முன்னிறுத்தித் தலித்துகள் உட்படப் பெரும்பான்மை ஒடுக்கப்படும் வர்க்கம் திருமணம் போன்றவற்றை நடத்துகிறது. இது விரும்பியே நடக்கிறது. இதைப் போலவே, பெண்களும் விரும்பு ஏற்கும் வண்ணம் அடிமைத்தனம் அவர்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது. அந்தக் காலத்தில் தனித்தனியே சில மீறல்கள் நடந்தன. எனினும் இப்போது உள்ளதைப் போன்ற பரவலான எதிர்ப்பு கிளம்பவில்லை. தொல்காப்பியம் பெண் மீதான அதிகாரத்தை விமர்சனமில்லாமல் பதிவு செய்துள்ளது. இதைச் சிறப்பாக மகாராசன் விளக்கியுள்ளார்.

ஒடுக்கப்பட்டவர்களின் நிலையிலிருந்து தொல்காப்பியத்தை நூலாசிரியர் நன்றாக ஆய்வு செய்துள்ளார். எனினும் அவர் மார்க்சிய, லெனினிய நோக்கில் ஆராய வேண்டுமே ஒழிய, இன்றைய முற்போக்கு சிந்தனைகளையும் பெண்ணிய சிந்தனைகளையும் அந்நூல் கொண்டிருக்கவில்லை என்று பார்க்கக்கூடாது. தொல்காப்பியம் என்பது நம் காலத்து நகையைப் போன்றது. அதிலுள்ள தங்கத்தை உருக்கி புதிய நகை செய்யலாம். அதிலுள்ள சிறந்த சிந்தனைகளுக்காக அதை மறுவார்ப்புச் செய்ய வேண்டுமே ஒழிய, அப்படியே ஏற்பதோ, அப்படியே புறக்கணிப்பதோ கூடாது. தொல்காப்பியம் போன்ற அறிவியலடிப்படையிலான இலக்கண நூல் அமைந்தது நம்மொழி, இனத் தனித் தன்மையைப் பேணக் காரணமாகிவிட்டது. இது நம் முன்னேற்றத்துக்குத் தடையாக இருக்கும் இடங்களைக் காண்பதும் மீறுவதும் நம் கடமை.

தமிழக வரலாற்றில் ஒடுக்கு முறைக்கு எதிரான மரபு செழுமையாகவே இருந்துவந்துள்ளது. பார்ப்பனிய வைதிக மரபுக்கு எதிரான சமண பௌத்தக் கருத்துக்கள் இங்கு ஆழமாக வேரோடி இருந்தன. அதை அயோத்திதாசப் பண்டிதரைப் போன்ற அறிஞர்கள் சிறப்பாகக் கொணர்ந் துள்ளனர். ஆனால் இடைப்பட்ட காலத்தில் பார்ப்பனியம் வெற்றியடைந்து எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றி விட்டது. விதிவாதம் பேசி சுரண்டப்படுகிறவர்களும் அதை ஏற்று அடங்கச் செய்துவிட்டது. இப்போது அந்த அடக்குமுறைக்கு எதிரான கலகக்குரல்கள் தலித்தியமாகவும், பெண்ணியமாகவும் பாட்டாளிவர்க்கக் குரலாகவும் ஓங்கி ஒலிக்கத் தொடங்கிவிட்டன. தொழில் வளர்ச்சி நகரங்களில் ஒருவகையிலும், சிற்றூர்களில் பழைய கொடூரமான வகையிலும் தலித்துகளை ஒடுக்குகிறது. இதைச் சிறந்த எடுத்துக்காட்டுகளின் மூலம் மூன்றாவது கட்டுரையில் விளக்குகிறார். எல்லாம் விதிப்பயன் என்று ஒடுங்கிப்போனது அந்தக்காலம்.

'எதையும் செய்யப் போவதில்லை நான்.....”

'எனக்கு பூட்டிய இழிமுகத்தை மட்டுமல்லாது

நீயணிந்து கொண்ட உயர் முகத்தையும்

கிழித்துக் கொண்டிருப்பது தவிர’


என்று இளைஞர்கள் எழுந்துவிட்டனர். ஒரு காலத்தில் óஇங்கிருந்த நிலமானிய உற்பத்திக்கு உதவிய சாதிப் பிரிவினையே இன்றைக்கு ஒட்டுமொத்த சமூகத்தின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாகிவிட்டது. அதைச் சமூகத்தின் எல்லாப் பிரிவினரும் சேர்ந்து நொருக்கியிருக்க வேண்டும். இங்கு இப்போது தலித் ஆண்களும் பெண்களும் ஒடுக்கு முறைக்கு எதிராக கிளர்ந்தெழுவது ஒட்டுமொத்த சமூகத் துக்குமே நல்லது. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் எல்லாவகையான சர்வாதிகாரங்களையும் அழித்தொழிப் பதைப்போல தலித்துக்களின் விடுதலை எல்லோருக்குமான விடுதலையாக மாறும் என்பதைச் சரியாகவே இனங்காட்டியிருக்கிறார்.

“'எதிர்க் கதையாடல்களின் தகர்ப்பில் உருவாகும் மாற்றுகள்” இன்றைக்கு ஆளும் வர்க்கங்களின் கதையாடல்களை எதிர்ப்பவர்களைச் சுட்டுகிறார். உண்மையில் நமது கதையாடல்கள்தான் நம் மண்ணுக்கே உரியவை. அலோபதி மருத்துவம் ஆளும் வர்க்க மருத்துவம் ஆன பிறகு நம் மண்ணுக்கே உரிய, சித்தம், ஆயுர்வேதம், யுனானி போன்றவை மாற்று மருத்துவமுறைகள் ஆகிவிட்டன. இதைப்போன்ற கொடுமைதான் எதிர்க்கதையாடல் என்பதும், ஒடுக்கப்பட்ட மக்களுடைய கதையாடல்களே நேர்க்கதையாடல்கள். பார்ப்பனிய கதையாடலே எதிர்க்கதையாடல். எதிரியின் வரையறையையும் அளவுகோலையும் கொண்டு நம்மை நாமே மதிப்பிடும் இழிநிலைக்கு உள்ளாகிவிட்டோம். ஒடுக்கப் பட்டோர் தங்களுடைய மூல வேர்களைத் தேடும் முயற்சிதான் தம் குலதெய்வங்களைக் காண்பது ஆகும்.

நிறுவன சமயங்கள் மற்றும் சடங்கு முறைகளுக்கு நேர் எதிரானவை இனக் குழுக்களின் மெய்யியலும் சடங்கு முறைகளும் ஆகும். இவர்களுக்கு தெய்வமும் உறவினர், நண்பரைப் போலத்தான் . என்ன நடந்தாலும் தெய்வச் செயல் என்று ஒடுக்கப்பட்ட மக்கள் இருப்பதில்லை. 'ஒனக்குக் கண்ணு அவிஞ்சு போச்சாஃ என்று தெய்வத்தையே கேள்வி கேட்கும் மக்கள் அவர்கள். ஏனென்றால் ஒடுக்கப்பட்டோரின் தெய்வங்கள் எல்லாம் 'செத்துச் சாமியாகிவிட்ட மூதாதையர்தாம்”. கிராமங்கள் நகர் மயமாவதையும் அதனால் விளைகிற பண்பாட்டு மாற்றங் களையும் பதிவு செய்கிற கவிதைகளை எடுத்துக் காட்டுகிறார் நூலாசிரியர். படிமுறை அமைப்பிலான சாதி ஆதிக்கத்தை ஒழிக்க, ஒடுக்கப்பட்ட சாதிகள் தமக்குள் இருக்கிற வேற்றுமைகளை ஒழிக்க வேண்டும் என்கிறார் கவிஞர் அபிமானி.

ஆனால் நம் பிறந்த மண், நம் தொல் பண்பாடு ஆகியவற்றை உயர்வாகப் பார்க்கும் போக்கு, நம்மை மீண்டும் இருண்ட காலத்துக்கே இட்டுச் செல்லும். பழம் பெருமை பேசுதல் புதுப் பெருமைகளை உருவாக்கு வதற்காக அமைய வேண்டும். தொழில் வளர்ச்சி வரவேற்கத் தக்கது. ஆனால் தொழில் துறைக் கழிவுகளும் திட்டமிடாத நகர்மயமாதலும் மண்ணைக் கெடுப்பவை. கிராமத்தில் உள்ளவர்களின் அன்பும் பற்றும் பண்பாடும் உயர்வானவை. ஆனால் வளர்ந்துவரும் சமூகச் சிக்கல்களைத் தீர்க்க இயலாதவை. எனவே நகர்மய மாதலினூடே, தொழில் வளர்ச்சியினூடே இயற்கையைக் கெடுக்காத, உயிர்ம வேளாண்மைக்கு உறுதுணையான கொள்கைகளை நடைமுறைப்படுத்துவது நம் கடமையாகும். அப்படிப்பட்ட கவிதைகள் சிலவற்றையும் சேர்த்துப் பார்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

வரலாறு எழுதும்போது வாய்மொழித் தரவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது நல்லது என்று நூலாசிரியர் நினைக்கிறார். ஆனால் தனிச் சாதியினரின் வாய்மொழி மரபுகள் எல்லாம் கிட்டத்தட்ட ஒன்றுபோல அமைந் திருப்பதைக் காணலாம். அவற்றில் மேல்நிலையாக்கக் கூறுகள் விரவி உள்ளன. எனவே, களஆய்வு, நாட்டார் வழக்காறுகள் தொல்லியல் சான்றுகள், கல்வெட்டுகள், பிற நாட்டாரின் குறிப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் உற்பத்தி முறை சார்ந்த வரலாறு, - பெரும்பான்மை உழைக்கும் மக்களின் வரலாறு எழுதப்படவேண்டும்.

கிருத்தவ சபைகளில் சேருகிறவர்களின் குடும்பக் கொடிவழி பதிவுசெய்யப்பட்டுப் பேணப்படுகிறது. அவர்கள் தங்களுடைய முன்னோர்களின் பெயர்களை அரிய முடியும். இந்துக்களிடம் அந்த வழக்கமில்லை. இனியாவது ஒவ்வொரு வரும் தங்கள் கொடிவழியே (எங்ய்ங்ஹப்ர்ஞ்ஹ்) முடிந்தவரையில் தொகுக்க வேண்டும். இது தனிமனிதராகச் செய்யக் கூடியதில்லை. ஒருவர் தன் கால் வழியைத் தேடிப் பின்னோக்கிச் சென்றால் அது ஒரு சாதியின் வரலாறாகவும் சாதி கலந்த சமூக வரலாறாகவும் அமையும். இதைத் தனிமனிதர்கள் தொடங்கிச் செய்ய வேண்டும். இது உருப்பெறும்போது குடும்பங்களின் வரலாறு, ஒடுக்கப்பட்டோர் வரலாறு உருவாகும்.

நவீனக் கவிதைமொழி பற்றிய கட்டுரையில் கவிஞர் அபியின் நேர்காணலோடு நின்று, தன்னுணர்ச்சிப் பாடல்களை, அதுவும் அரசியலற்ற கவிதைகளை ஆராய்கிறார். நவீன கவிதை என்பது புறவயக் கவிதைகளை புறக்கணிக்க மாட்டாத சமூகம் சார்ந்த கவிதை என்பதே இதன் சிறப்பு. அத்தகைய கவிதைகளைப் பற்றியும் எழுதியிருக்க வேண்டும். பழைய மரபுகளைக் கடந்து புதியனவாக வரும் நவீனம் உற்பத்தி முறை சார்ந்தே உருவாகிறது. இதை இன்னமும் விரிவாகச் செய்திருக்கலாம்.

பெண்மொழி எழுத்துகள் பற்றி நிறையப் பேசப்படும் காலம் இது. ஆனால் ஊடகங்கள் ஒடுக்கும் வர்க்கத்திடம் உள்ளன. அங்கும் அதிகாரம் ஆண்களிடமே உள்ளது. எனவே பெண்கள் ஆண்களின் பார்வையில் விமர்சிக்கப் படுகிறார்கள். பெண்கள் தம் உடற்கூறு மாற்றங்களைப் பற்றியோ உணர்வுகளைப் பற்றியோ பேசவிடாமல் ஆண்களால் தடுக்கப்படுகின்றனர். அதை மீறுகிற போக்கில் பெண்கள் கூடக்குறைய எழுதிவிட்டுப் போகட்டுமே ஆண்கள் அப்படி எழுதும்போது பொறுத்துப் போக வில்லையா? பெண் தன் உடல் மீது தான் மட்டுமே ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பது மட்டுமே பெண்ணியம் ஆகாது. பெண்ணுக்கு அக வாழ்க்கையைப் போலவே புற வாழ்க்கையும் உண்டு. அகவாழ்க்கையிலும் பாலியல் தவிர்த்த எத்தனையோ உண்டு. ஆனால் இக்கட்டுரையில் காட்டப்பட்டுள்ள கவிதைகளைப் படிப்போர்க்கு பெண் எழுத்து என்பது 'பாலியல் எழுத்துகள்” என்ற கருத்து உருவாகும்.

பெண்ணியம் என்பது அனைத்துத் துறையிலும் ஆண்-பெண் சமத்துவம் கோருவது. ஆணோடு சேர்ந்து அனைத்துத் துறைகளிலும் முன்னிலையில் நிற்கும் புறவாழ்க்கையையும், அவளது அக வாழ்க்கையின் பிற கூறுகளையும் சுட்டிக்காட்டுவதாக உள்ள கவிதைகளையும் எடுத்துக்காட்டியிருக்கலாம். இக்குறை பாட்டை இனிவரும் கவிதைகளில் களைவார் என நம்பலாம். ஏனெனில் ஏற்கனவே பெண்ணைப் பாலியல் நுகர் பொருளாகக் கட்டமைத்துள்ள ஆண் ஆதிக்க வரையறைக்குள் பெண்தானே சென்று விழுவதைப் போல இக்கட்டுரைகள் உள்ளன. தமிழ்க் கவிதைகளைப் பற்றிய திறனாய்வு, சிறப்பாக அமைந்துள்ளன. எனினும் 'தமிழ்ப் புதுக்கவிதைகள்” சமூகத்தின் கடைநிலைகளைப் பற்றிப் பேசுகின்றனஃ என்ற கட்டுரையாசிரியரின் கூற்று முற்றிலும் ஏற்கத் தக்கதில்லை. தொடக்கத்தில் அப்படி இருந்தாலும், இப்போது வெளிவரும் கவிதைகள் பலதரப்பட்டவையாக உள்ளன.

இந்திய தேசம் பற்றிய கட்டுரை சில நூல்களை மட்டுமே ஆதாரமாகக் கொள்ளாமல் ஆழமாக எழுதப்பட்டிருந்தால் சிறப்பாக அமைந்திருக்கும். ஞான அலாய்சியஸின் தேசிய இனச் சிக்கலைப் பற்றிய நூல் சிறப்பாக உள்ளது. பழைய மார்க்சிய லெனினியக் கட்டுரைகளையும் உள்வாங்கிக் கொண்டு இன்னும் சிறப்பாக எழுத வேண்டும். பார்ப்பனியம் தன் தேவைக்காக இந்திய தேசம் என்ற கருத்தியலை முன்வைத்தபோதும், இங்குள்ள பெரும்பான்மை மக்கள் அதை ஏற்க வேண்டிய புரவயக் காரணங்கள் என்ன? ஒரு பரந்த நாடு இருப்பதன் நன்மைகள் என்ன? பல தேசிய இனங்கள் ஒன்று கலந்து அமெரிக்க தேசம் எப்படிக் கட்டியமைக்கப்பட்டது. என்பதையெல்லாம் கவனத்தில் கொள்ளவேண்டும். மொத்தத்தில் 'கீழிருந்து எழுகின்ற வரலாறுஃ நல்ல முயற்சி. தோழர் குருசாமி மயில் வாகனன் சொல்லியிருப்பதைப் போல தன் உறையில் இருந்து வாளை உருவி வீசிய கன்னிப் போரிலேயே வெற்றி பெற்றிருக்கும் மகாராசன் மேலும் மேலும் வளர்ந்து பொழிவு பெறுவார் என்று நம்புகிறேன்.

       நன்றி: கவிதாசரண் இதழ், 2007
                       கீற்று.காம்

வெள்ளி, 4 டிசம்பர், 2015

மகாராசனின் கீழிருந்து எழுகின்ற வரலாறு

மகாராசனின்
     கீழிருந்து  எழுகின்ற வரலாறு : நூல் மதிப்புரை.
      _ சுந்தர்      
                                                                       
                                                         

      
வரலாற்று உணர்வு வெள்ளையர்களுக்கு இருப்பதைப் போல இந்தியர்களுக்கு, அதிலும் தமிழர்களுக்குக் கிடையாது. "ஒவ்வொரு மனிதனும் பல பத்தாண்டுகள் வாழ்கிறான். அவன் தன்னைப் பற்றி - தன் குடும்பத்தைப் பற்றி - தன் முன்னோரைப் பற்றி - தான் அறிந்தவற்றைப் பற்றி செய்திகளை ஒரு வரலாறாக பதிவு செய்து வைக்க வேண்டும் என்கிற வரலாற்று உணர்வு தமிழனுக்கு வரவேண்டும்" என்பதை நாடோறும் வற்புறுத்திய நாடறிந்த நல்லறிஞர் சுரதா என்று வே. ஆனைமுத்து அவர்கள் (சிந்தனையாளன் சூலை 2006) குறிப்பிடுவார். இதை நன்கு புரிந்து கொண்ட 'கீழிருந்து எழுகின்ற வரலாறுஃ நூலின் ஆசிரியர் மகாராசன் 'தமிழ்ச் சமூகத்தின் தொடர்ச்சியான வீழ்ச்சிகளுக்குத் தன் வரலாற்றைப் பதிவு செய்யாத மெத்தனப்போக்கும், வரலாற்றைப் பற்றிய போதிய புரிதல் இல்லாமையும் ஒரு காரணம்என்கிறார். அதன் ஒரு பகுதியாக தமிழக வரலாற்றை எழுதிப் பார்க்கும் முயற்சியாக இந்த நூல் வெளியாகியுள்ளது.
நூலாசிரியர் மகாராசன் அவர்கள் "இங்குள்ள கலை, இலக்கியம், வரலாறு, பண்பாடு, மொழிக்கூறுகள், அரசியல் பொருளாதாரம், ஊடகங்கள் யாவும் ஒடுக்குண்டவர்களுக்கு ஆனதாக இல்லை என்கிற போது... கீழிருந்து எழுகின்ற வரலாறு எனும் இந்நூல் அடித்தளம் குறித்த சில பதிவுளை முன்வைக்க முயலுகிறது" என்று தன் முன்னுரையில் கூறியிருப்பது மிகவும் சரியாக உள்ளது. அதற்காக அவர் "கல்விப்புல, பொது அரங்குகளில் முன் வைக்கப்பட்ட கட்டுரைகளையும், பல்வேறு சிற்றிதழ்களில் வெளிவந்த கட்டுரைகளையும் விரிவாக்கிச் செப்பம் செய்த 9 கட்டுரைகள் மட்டுமே இந்நூலில் இடம் பெற்றுள்ளன" என்று குறிப்பிட்டிருக்கிறார். கடினமாக உழைத்து இந்நூலைப் படைத்துள்ளார்.
முதல் 2 கட்டுரைகளும் தொல்காப்பியத்தைப் பற்றி எழுதப்பட்டவை. சமுதாயத்தின் படிநிலையில் உயர்ந்தோர், தாழ்ந்தோர் எனும் வேறுபாட்டினை அடையாளம் காட்டுவதோடல்லாமல், தொல்காப்பியம் காலந்தொட்டு உள்ள இலக்கண நூல்கள் உயர்ந்தோரைச் சார்ந்தே இயங்குகின்றன என்று முதல் கட்டுரையில் கூறுகிறார். 2-வது கட்டுரை "தொல்காப்பியத்தில் பெண்-ஆண் பற்றிய கருத்தாக்கம்." அதில் ஆணாதிக்கச் சிந்தனைகள் எவ்வளவு மோசமாக உளளன என்பதைக் குறிப்பிடுகிறார்.
"கீழிருந்து எழுகின்ற வரலாறு" கட்டுரையில "சமூகத்தின் வரலாறு மேல்தளத்திலிருந்து தொடங்காமல், கீழ்த்தளத்திலிருந்து தொடங்க வேண்டும்... அதுதான் உண்மையான வரலாறாக இருக்க முடியும்" என்று கூறும் ஆசிரியர் "மக்களின் சொலவடைகள் விடுகதைகள், சொல்லாடல்கள் முதலியவற்றையும், மக்களிடம் இருந்து கொண்டிருக்கும் பழக்க வழக்கங்கள், சடங்குகள், நம்பிக்கைகள், வாழ்வு முறைகள், அனுபவங்கள் என மக்களிடமிருக்கும் தரவுகளையும் சேகரித்துக் கொண்டு வரலாறு எழுதப்படவேண்டும்" என்று கூறுகிறார். "நிறுவன சமய மரபுகளைப் பொறுத்தவரையில், அவைகள் செயற்கையாக உருவாக்கப்பட்டவை. ஒடுக்கப்பட்ட மக்களின் சமய மரபுகள் யதார்த்தமானவை. வாழ்வியலோடு நெருங்கிய தொடர்புடையவை. வாழ்க்கையை எதிரொலிப்பவை" என்பதுடன் "இந்துத்துவ எதிர்நிலைப் பண்பாட்டு மரபுக் கூறுகளைக் கொண்டிருப்பவை" என்று கூறுகிறார்.
"தனக்குச் சாதகமானவற்றைப் புனிதம் எனவும், பிறவற்றை எல்லாம் தீட்டு எனவும் வகைப்படுத்தி வைத்திருக்கிறது பார்ப்பனீயம். இத்தகைய மேலாதிக்கச் சிந்தனைதான் சமூகத்தின் அடிஆழம் வரை பரவியிருக்கிறது. "நாட்டார் மரபு" என்றழைக்கப்பெறும் வாய்மொழி மரபு ஒரு புறமும், செவ்வியல் என்றழைக்கப்பெறும் எழுத்து மரபு இன்னொரு புறமும் மக்களிடையே புழக்கத்தில் இருந்து வருகின்றன. சாதி ரீதியாக, பொருளாதார ரீதியாக, பாலின ரீதியாக ஒடுக்குண்டு கிடக்கும் உழைக்கும் பெரும்பான்மை மக்களின் பண்பாடுகள், நம்பிக்கைகள், கலை இலக்கிய வெளிப்பாடுகள், வாழ்வியல் நியதிகள், பட்டறிவு வெளிப்பாடுகள் போன்றன எல்லாம் இழிவானவை, தரம் குறைந்தவை, மதிப்பில்லாதவை, குறைவானவை, சிறப்பில்லாதவை எனக் கருத்தாக்கம் செய்யப்பட்டிருக்கிறது... அதே போல தாலாட்டில் தொடங்கி ஒப்பாரி வரைக்கும் விரவிக் கிடக்கும் பாடல்களுக்கும் அங்கீகாரம் கிடையா" என்று தமிழ்க் கவிதை எழுத்தின் அரசியல் என்ற கட்டுரையில் குறிப்பிடும் ஆசிரியர் "வினையே ஆடவர்க்கு உயிர் மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிர்" எனும் சங்ககாலக் காதல் கவிதையில் உள்ள பெண்ணடிமைத்தனத்தைச் சுட்டுகிறார். நிலவுடைமைச் சமூகத்திலிருந்து முதலாளித்துவம் வந்த பிறகு, மரபுக் கவிதைத் தளத்திலிருந்து, புதுக்கவிதைத் தளத்திற்கு மாறுதல்களை ஏற்படுத்திக் கொண்டது என்கிறார்.
"இந்திய தேசம்: வேர்களும், கிளைகளும்" என்ற கட்டுரையில், ஆங்கிலேயர் மீதான பெருவாரி மக்களின் எதிர்ப்புணர்வை "இந்திய விடுதலைப் போராட்டம்" என்கிற பெயரில் திரட்டிக் கொண்டு, இந்துத்துவம் கோலோச்சும் பார்ப்பனிய தேசமாகக் கட்டமைத்து விடும் முயற்சியில் ஒரு பொய்யான தேசத்தைப் பல புனைவுகளைக் கொண்ட கற்பிதங்களால் உருவாக்கி நடைமுறைப்படுத்த முயல்கிறது பார்ப்பனீயம். அவர்களின் இந்திய தேசம் என்பது இந்துப் பார்ப்பனிய தேசம்தான் என்கிறார்.
திருவள்ளுவர் காலந்தொட்டு பார்ப்பனிய எதிர்ப்பு உள்ளதைச் சுட்டும் ஆசிரியர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகப் பார்ப்பனியம் இச்சமூகத்தில் தன் வேர்களைப் பரப்பியிருந்தாலும், அவ்வேர்களின் முனைகள் ஆபத்தானவை என்பதை அடையாளம் காட்டிய போக்குகள் பிற்காலத்தில்தான் வெளிப்படுகின்றன. பூலே, அயோத்திதாசர் (Ayothidasar), பெரியார் (Periyar), அம்பேத்கர் (Dr.Ambedkar) போன்றவர்கள் பார்ப்பனீயத்தைத் தோலுரித்துக் காட்டியவர்களில் முதன்மையானவர்கள் என்கிறார் ஆசிரியர். பெரியார் இந்திய தேசத்தை ஏற்றுக்கொள்ள மறுப்பதற்கான காரணம் பார்ப்பனியத்தை எதிர்க்க வேண்டும் என்பதற்கே ஒழிய, மொழி வழித் தேசிய இனங்கள் குறித்த பார்வையினால் அல்ல என்றும் குறிப்பிடுகிறார்.
மொத்தத்தில் தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய ஒரு நூல் இது.
("கீழிருந்து எழுகிற வரலாறு" ஆசிரியர் - மகாராசன், வெளியீடு: பரிசல், எண்1. இந்தியன் வங்கி காலனி, வள்ளலார் தெரு, சூளை மேடு, சென்னை - 94. விலை ரூ.50

                                                நன்றி: தமிழ் கூடல்.காம்