செவ்வாய், 12 ஜனவரி, 2016

சுறவம் (தை) முதல் நாளே தமிழரின் புத்தாண்டு !


சுறவம் (தை) முதல் நாளே 
தமிழரின் புத்தாண்டு ! 

                                                                                      நக்கீரன்

மழை விட்டும் தூவானம் விடவில்லை என்பது போல  தை முதல்நாளே தமிழரின் புத்தாண்டு என்று தமிழக அரசு முடிவு செய்து 1.2.2008 அன்று அதற்குச் சட்ட வடிவம் கொடுத்தது. ஆனால் அதற்குப் பின்னரும் சித்திரை முதல்நாளே தமிழரின் புத்தாண்டு என்று ஒரு விரல் விட்டு எண்ணக் கூடிய இந்து்த்துவ வாதிகள்  மல்லுக்கு நிற்கிறார்கள். அவர்கள் தாராளமாக சித்திரைப் புத்தாண்டைக் கொண்டாடலாம். யாரும்  வேண்டாம் என்று தடுக்கவில்லை. ஆனால் சித்திரை தமிழ்ப் புத்தாண்டல்ல.
சூரியன் மேட இராசி, அசுவினி நட்சத்திரத்தில் புகும் நாளே சித்திரை ஆண்டுப் பிறப்பு என்கிறார்கள். அதுவே வேனில் காலத்தின் தொடக்கம் என்கிறார்கள். இவை முழுதும் சரியல்ல. இன்று வேனில் காலம் மார்ச்சு 20 இல் தொடங்குகிறது. காரணம் புவி தனது சுற்றுப்பாதையில் சூரிய - சந்திர ஈர்ப்பினால் பின்னோக்கி (Precession of Equinoxes) நகர்கிறது. அண்ணளவாக 71.6 ஆண்டுகளில் ஒரு பாகை (ஒரு நாள்) பின்நோக்கி நகர்கிறது. ஆயிரம் ஆண்டுகளில் 14 நாள்கள் நகர்ந்துவிடுகிறது. இன்று இந்திய சோதிடக் கணிப்புக்கும் கிறகேறியன் காலக் கணிப்புக்கும் 24 நாள்கள் வேறுபாடு காணப்படுகிறது. இன்னும் 11,230 ஆண்டுகளில் இளவேனில் காலத்தில் சூரியன் மேடராசிக்குப் பதில் துலா இராசியில் புகுவார்! அதாவது மேட இராசிக்கு எதிர்ப்புறம் 180 பாகையில் காணப்படும் துலா இராசியில் புகுவார்.
தமிழர்களது புத்தாண்டு என்றும் சித்திரையில் தொடங்கவில்லை. தொல்காப்பியர் (கிமு 2,500 ஆண்டு) தமிழர்களது  ஆண்டு ஆவணியில் தொடங்கி ஆடியில் முடிந்ததாகச் சொல்கிறார்.
காரும் மாலையும் முல்லை குறிஞ்சி
கூதிர் யாமம் என்மனார் புலவர் 

இந்த நூற்பாவிற்கு உரை எழுதிய நர்ச்சினார்கினியர் சிம்ம ஓரைக்கு (இராசி)  உரிய மாதம் ஆவணி. கடக ஓரைக்கு உரிய மாதம் ஆடி. ஆக முன்னாளில் ஆவணி மாதத்தில் ஆண்டு தொடங்கி ஆடி மாதத்தில் முடிந்திருக்கிறது என்கிறார்.  தமிழ்ப் புத்தாண்டு பண்டுதொட்டு  சித்திரையில் தொடங்கவில்லை என்பதற்கு இந்த உரை ஆணித்தரமான சான்றாக விளங்குகிறது.
இந்துத்துவவாதிகள் ஆதி தொட்டு தமிழர்கள் இந்து சமயத்தவர்களாக இருந்து வருகிறார்கள் என நினைக்கிறார்கள்.  ஆனால் உண்மை அதுவல்ல. தமிழகத்தில் நந்தர், மோரியர் காலத்தில் இருந்தே வேதநெறி, ஆசீவகம், சமணம்,  பவுத்தம், உலகாய்தம் போன்ற நம்புநெறிகளும் நம்பாநெறிகளும் ஊடுருவி இருந்தன.
தமிழில் உள்ள அய்ம்பெருங்காப்பியங்களும் அய்ஞ்சிறு காப்பியங்களும் சமண, பவுத்த காப்பியங்களாகும். ஒன்றேனும் வேதநெறிக் காப்பியம் அல்ல. 
சங்க இலக்கியங்களில் எல்லாத் திங்கள்களின் பெயர்களும் சொல்லப்படவில்லை. தை, மாசி (பதிற்றுப்பத்து) பங்குனி (புறநானூறு) சொல்லப்பட்;டுள்ளது. ஆனால் தொல்காப்பிய ஆசிரியர் இகரவீற்றுப் புணர்ச்சி, ஐகாரவீற்றுப் புணர்ச்சியை விளக்கும்போது 'திங்களும் நாளும் முந்து கிளந்தன்ன' எனக் கூறுவதைக் காணலாம். எல்லாத் திங்கள்களின் பெயர்களும் இந்த இரண்டு எழுத்தில் (இ, ஐ) முடிந்தன என்கிறார். எனவே இன்றுள்ள 12 மாதங்களும் அவர் காலத்தில் இருந்து வருகின்றன எனத் துணியலாம்.

மேலும் தொல்காப்பியர் அ,இ,உ,எ, ஒ என்னும் ஐந்து உயிர் எழுத்துக்களும் ஒரு மாத்திரை ஒலிக்கும் குறில் எழுத்துக்கள் என்கிறார்.

ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஒ, ஒள என்னும் ஏழு உயிர் எழுத்துக்களும் இரண்டு மாத்திரை ஒலிக்கும் நெடில் எழுத்துக்கள். மூன்று மாத்திரைகளில் எந்த எழுத்தும் ஒலிக்கப்படுவதில்லை. ஒலி மிகுதல் தேள்வைப்பட்டால் அந்தளவிற்குத் தேவையான எழுத்து ஒலிகளை எழுப்புதுல் வேண்டும். இதே போல் மெய் எழுத்துக்கு ஒலி அரை மாத்திரை. மாத்திரையின் கால அளவென்ன?

"கண்இமை நொடிஎன அவ்வே மாத்திரை
நுண்ணிதின் உணர்ந்தோர் கண்ட வாறே"              (தொல். எழுத்து - நூல்மரபு 8)

(இயல்பாகக் கண் இமைத்தலும், விரல் நொடித்தலுமே ஒரு மாத்திரை என்னும் ஒலி அளவு. இது தெளிவாக அறிந்தோர் வழி.)

காலத்தை இவ்வளவு நுணுக்கமாகக் கணக்கிட்ட புலவர்கள், இலக்கண ஆசிரியர்கள், கணிஞர்கள் தமிழர்களுக்கென ஒரு பொதுவான தொடர் ஆண்டை உருவாக்கவில்லை.  அதனால் அரசர்கள் புலவர்கள் சான்றோர்கள் பிறப்பு ஆண்டு, மறைவு ஆண்டு இவற்றைத் தொடர் ஆண்டோடு தொடர்பு படுத்தி வரலாற்றைப் பதிவு செய்ய முடியாமல் போய்விட்டது.

அரசர்கள் முடிசூடிக் கொண்ட ஆண்டை அடிப்படையாகக் கொண்டே அந்தந்த அரசர்கள்  25 ஆண்டுகள், 40 ஆண்டுகள் ஆட்சி செய்தனர் எனக் கல்வெட்டுகளிலும் மெய்கீர்த்திகளிலும் குறிப்பிட்டார்கள். இராசராசன் (கிபி 985 - 1014) தனது 19 ஆவது ஆட்சியாண்டில் தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டத் தொடங்கி இருக்கலாம் என நம்பப்படுகிறது. முடிசூட்டிக்கொள்வதற்குமுன்பு வரை அருண்மொழிதேவன் என அறியப்பட்டிருந்த இராசராசனுக்கு அவனது பத்தொன்பதாவது ஆட்சியாண்டில்தான் ‘இராஜராஜதேவன்‘ என்ற பட்டப்பெயர் அளிக்கப்பட்டது. அவன் இருபத்தேழு ஆண்டுகாலம் ஆட்சி புரிந்தான். இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் தஞ்சைப் பெரிய கோயிலை யார் கட்டியது என்பது நீண்ட காலம் தெரியாமல் இருந்தது. 1886 ஆம் ஆண்டில் சென்னை அரசு ஹூல்ஷ் என்ற ஜெர்மன் அறிஞரைக் கல்வெட்டு ஆய்வாளராக அமர்த்தியது. அவரே  பெரியகோயில் கல்வெட்டுகளைப் படியெடுத்துப் படித்து அதனைக் கட்டியவன் மாமன்னன் இராசஇராசனே என முதன்முதலாகக் கூறினார். புலவர்களைப் பொறுத்தளவில் பிறந்த  இறந்த ஆண்டு பற்றிய எந்தக் குறிப்பும் இல்லை. அதனால் சங்க காலப் புலவர்கள் மட்டுமல்ல சங்கம் மருவிய காலப் புலவர்கள், இடைக்காலப் புலவர்கள் எந்த ஆண்டில் மட்டுமல்ல எந்த நூற்றாண்டில் பிறந்தார்கள் என்பது கூடத் தெரியாமல் இருக்கிறது. எடுத்துக்காட்டாக  கம்பர் காலம் 9 - 12 ஆம் நூற்றாண்டு எனக் கணக்கிடுகிறார்கள். 

தமிழர் வரலாற்றில் காலக் குழப்பம் இருப்பதற்கு தொடர் ஆண்டு இல்லாதது முக்கிய காரணமாகும், இருக்கிற 60 ஆண்டுகளும் சுழற்சி முறையில் வருவது மேலும் குழப்பத்தை உருவாக்கவே உதவியது. இதனால் வரலாற்று நிகழ்ச்சிகளை 60 ஆண்டுகளுக்கு மேல் கணக்கிட முடியவில்லை.

இப்போது வழங்கும் பிரபவ தொடங்கி சய ஈறாக 60 ஆண்டுப் பெயர்கள் சாலிவாகனன் என்பவனால் அல்லது கனிஷ்ஷனால் கி.பி 78 இல் ஏற்பட்டவை. இவை வடநாட்டு அரசனால் ஏற்பட்டவையாதலின் வடமொழிப் பெயர்களாய் உள்ளன. (பக்கம் 7 தி ஹிந்து 10-03-1940). 
இடைக் காலத்தில் 'சக' ஆண்டை வைத்துத் தொடர் ஆண்டு எண்ணப்பட்டது. சக என்பது  சாலிவாகன் பெயரில் உள்ள சாலிவாகன சகாப்தம் என்பதன் சுருக்கமாகும். தமிழ்நாட்டில் மொகலாயர் ஆட்சியில் அரசு ஆவணங்களில், குறிப்பாக வருவாய்த் துறை ஆவணங்களில் 'பசலி' ஆண்டு என்ற தொடர் ஆண்டு பின்பற்றப்பட்டது.

புராணக் கதையின்படி ஒரு காலத்தில் நாரத முனிவர் காமம் மேலோங்கி அலைந்தபோது அவருக்கு அறுபதினாயிரம் கோபியரோடு கொஞ்சிக் குலாவும் கிருஷ்ண பகவான் நினைவு வந்ததது. நேராக அவர் முன் போய் 'கிருஷ்ணா, சதா கோபியரோடு கொஞ்சி இன்பம் அனுபவிக்கும் தேவனே, எனக்கு யாராவது ஒரு கோபியைத் தந்து எனது காம இச்சையைத் தீர்த்து வைக்க வேண்டும்'' என வேண்டினார்.

அதற்குக் கிருஷ்ண பரமாத்மா ''நாரதரே, நான் இல்லாத பெண்ணை நீ அனுபவித்துக்கொள்'' என ஆறுதல் மொழி கூறினார்.

ஆண்டவன் அருள்வாக்கு அருளப்பெற்ற நாரதர் வீடு வீடாய் அலைந்தார். அனைத்துப் பெண்கள் மனதிலும் கிருஷ்ணனே நீக்கமறக் குடி கொண்டிருந்தார். ஒரு கோபியும் அதற்கு விதி விலக்கல்ல. ஏக்கமும், ஏமாற்றமும் அடைந்த நாரதர் மானம், வெட்கம் எல்லாவற்றையும் தொலைத்து விட்டு மீண்டும் கிருஷ்ண பரமாத்மாவிடமே வந்தார்.

'கிருஷ்ணா! எல்லாக் கோபியர் மனதிலும் தாங்களே இருக்கக் கண்டேன். தேவரீர் என்னை இவ்விதம் சோதிக்கலாமா? காம வேட்கை எனை வாட்டுகிறது. என்னைப் பெண்ணாக மாற்றி நீரே என்னை அனுபவித்து என் வேட்கையைப் போக்க வேண்டும்"' என வேண்டி நின்றார்.

பரிதாபப் பட்ட பகவானும் அவ்விதமே நடப்பதாகக் கூறி, நாரதரைப் பெண்ணாக்கி அவரோடு கலந்து அறுபது குழந்தைகளைப் பெற்றார்.

அந்த அறுபது குழந்தைகள் தான் பிரபவ முதல் அட்சய வரையிலான ஆண்டுகள். அந்தப் பெயர்கள் ஒன்றேனும் தமிழ் அல்ல. அறிவுக்கும் அறிவியலுக்கும் ஒவ்வாத இவ்வாண்டு முறை வரலாற்றுக்கு உதவாத வகையில் உள்ளது.

தமிழ் அல்லாத  அறுபது ஆண்டுமுறை தமிழர்களுக்குத் தேவைதானா என்பதை ஆத்திரம் கொள்ளாமல் ஆன்மீகத் தமிழர்கள் ஆர அமர  எண்ணிப் பார்க்க வேண்டும்.

பிரபவ முதல் அட்சய வடமொழிப் பெயர்களாவது தமிழர்கள் பெருமை கொள்ளத் தக்கவாறு உள்ளதா என்றால் அப்படியும் இல்லை. எடுத்துக் காட்டாக மூன்றாவது ஆண்டின் பெயரான "சுக்கில" ஆண் விந்தைக் குறிக்கிறது. இருபத்துமூன்றாவது ஆண்டான விரோதி எதிரி என்ற பொருளைத் தருகிறது. முப்பத்தெட்டாவது ஆண்டு குரோதி. இதன் பொருள் பழிவாங்குபவன் என்பதாகும். முப்பத்துமூன்றாவது ஆண்டின் பெயர் விகாரி. பொருள் அழகற்றவன், ஐம்பத்துஐந்தாவது ஆண்டான துன்மதி கெட்டபுத்தி என்று பொருள்.

ஆண்டுகள் வரலாற்றைத் தொடர்ச்சியாக பதிவு செய்யப் பயன்பட வேண்டும். அவை குழப்பத்திற்கு இடமின்றி இருத்தல் வேண்டும். இதனை மனதில் இருத்தி தை முதல் நாளே தமிழரின் புத்தாண்டுத் தொடக்கம் என்று 1921 ஆம் ஆண்டிலேயே தமிழறிஞர்கள் கூடி முடிவெடுத்தார்கள். 
தமிழர் மொழி, மரபு, மானம், பண்பு, வாழ்வு முதலியவற்றுக்கு ஏற்பட்டுள்ள அழிவும் இழிவும் இரண்டையும் எண்ணிப் பார்த்து, உணர்ந்து தெளிந்த தமிழ் அறிஞர்கள், சான்றோர்கள், புலவர்கள் 1921 ஆம் ஆண்டு சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்க்கடல் மறைமலை அடிகள் தலைமையில் கூடிய மாநாட்டில் ஆராய்ந்தார்கள். பேராசிரியர் கா நவச்சிவாயர் அந்த மாநாட்டைத் தொடக்கி வைத்தார். 

திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டு ஒன்றை உருவாக்கி அதனைப் பின்பற்றுவது, அதையே தமிழ் ஆண்டு எனக் கொள்வது, திருவள்ளுவர் இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு 31 ஆண்டுகள் முன்பு பிறந்தவர் என்றும் அவர் பெயரில் தொடர் ஆண்டு ஒன்றைப் பின்பற்றுவது என்றும் அதையே தமிழ் ஆண்டு எனக் கொள்வது என்றும் முடிவு செய்தார்கள்.

இந்த முடிவு செய்தவர்களில் தலையாய தமிழ் அறிஞர்கள் தமிழ்க் கடல் மறைமலை அடிகள், தமிழ்த் தென்றல் திரு.வி கலியாணசுந்தரனார், தமிழ்க்காவலர் கா. சுப்பிரமணியப் பிள்ளை, சைவப் பெரியார் சச்சிதானந்தம் பிள்ளை, நாவலர் ந.மு வேங்கடசாமி, நாவலர் சோமசுந்தர பாரதியார், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ விசுவநாதம் ஆகியோர் ஆவர். 

1935 ஆம் ஆண்டு திருச்சியில் அகில தமிழர் மகாநாடு என்ற பெயரில் ஒரு மகாநாடு நடைபெற்றது. பசுமலை சோமசுந்தர பாரதியார் தலைமையில் நடைபெற்ற இந்த மகாநாட்டில் கா. சுப்பிரமணியனார், மதுரை தமிழவேள், பி.டி. இராசன், தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், புலவர் கா.ப. சாமி, திரு.வி.க. மறைமலை அடிகளார் முதலான பல தமிழறிஞர்கள் கலந்து கொண்டார்கள். தந்தை ஈ.வெ.ரா. பெரியாரும் இந்த மகாநாட்டில் கலந்து கொண்டார். இந்த மகாநாட்டின் போது தைப்பொங்கல் சமயவிழாவா? இல்லை சமயசார்பற்ற விழாவா? என்று பலத்த விவாதம் எழுந்தது. இறுதியாக, மறைமலை அடிகளார் திட்டவட்டமாகக் கீழ்வருமாறு கூறினார்.
பொங்கலைச் சமயவிழா என்று குழப்பம் செய்ய யார் முயன்றாலும் அவர்கள் இம் மாநாட்டை விட்டு வெளியேறி விடவேண்டும். இது சமய சார்பு இல்லாத விழா! எந்த சமயத்துக்காரன், எந்த சாத்திரக்காரன் இந்த விழாவை எடுத்துள்ளான்? எந்தச் சூத்திரம் இதற்கு இருக்கிறது? எந்த இதிகாசம் இதற்கு இருக்கிறது? ஆனால் தமிழில் புறநானூற்றில், பிட்ட  கொற்றன் வரலாற்றில் சாத்தனாரின் பாடலில் சான்று இருக்கின்றது. இதை என்னுடைய அருமை நண்பர் ஈ.வெ.ரா ஏற்றுக் கொண்டாலும் சரி, ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் சரி திருவள்ளுவர் காலம் கி.மு 31. எனவே, ஆங்கில ஆண்டான 1935 டுடன் 31 அய்க் கூட்டினால் வருவது திருவள்ளுவர் ஆண்டு 1966 ஆகும். (கி.பி. 31 +1935 = தி.பி. 1966)
இல்லை நான் ஏற்றுக் கொள்கின்றேன் என்று ஈ.வெ.ரா. பெரியார் தெளிவாகப் பதிலுரைத்தார். அனைவரும் கையொலி எழுப்பினர். அதனை அடுத்து திரு.வி.க. அவர்கள் பெரியாரின் முடிவைப் பாராட்டிப் பேசினார்.
அடிகளாரின் அறிவித்தலை அறிஞர் அவை ஏற்றுக்கொண்டது. அன்று தொட்டு அறிஞர்களால் அவ்வாண்டு நடைமுறைப்படுத்தப்பட்டு (பக்கம் 117, திருவள்ளுவர் நினைவு மலர் 1935) வருகிறது. 

திருவள்ளுவர் ஆண்டுக்கு முதல் மாதம் தை இறுதி மாதம் மார்கழி. புத்தாண்டுத் தொடக்கம் தை முதல் நாள். ஏழு கிழமை நாள்களின் பெயர்களில் புதன், சனி நீங்கலாக எஞ்சியவை தமிழ்ச் சொற்களாகும். புதன் தமிழில் அறிவன் என்றும் சனி தமிழில் காரி என்றும் அழைக்கப்படுகிறது. 

தமிழ் அறிஞர்களின் முயற்சியால் தமிழர் திருநாளான பொங்கல், தமிழ் ஆண்டு, திருவள்ளுவர், தமிழ் மறை ஆகியன உலகத் தமிழரால் போற்றிக் கொண்டாடடப்பட்டு வருகின்றன. இதனால் தமிழர் நலவாழ்வு, வளவாழ்வு, பெருவாழ்வு, புகழ் வாழ்வு பெற முடிகிறது. 

தமிழக அரசைப் பொறுத்தளவில் தை முதல் நாளே திருவள்ளுவர் ஆண்டுத் தொடக்கம் என்பதை ஏற்று 1971 முதல் தமிழ்நாடு அரசு நாள்குறிப்பிலும் 1972 முதல் தமிழ்நாடு அரசு இதழிலும் 1981 முதல் தமிழ்நாடு அரசின் அனைத்து அலுவல்களிலும் நடைமுறைப்படுத்தி வருகிறது. 1969 ஆம் ஆண்டு தை இரண்டாம் நாள் திருவள்ளுவர் நினைவாக  விடுமுறை அறிவிக்கப்பட்டது.
அதற்கு முன்னரே தமிழீழ நிழல் அரசும் தை முதல்நாளே தமிழரின் புத்தாண்டு என அறிவித்தது நினைவிருக்கலாம்.

பத்தன்று நூறன்று பன்னூ றன்று
பல்லாயி ரத்தாண்டாய்த் தமிழர் வாழ்வில்
புத்தாண்டு, தை முதல் நாள், பொங்கல் நன்னாள்!

என்ற புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடல் தமிழருக்குத் தமிழ்ப் புத்தாண்டு தை முதல் நாள் என்பத அறுதியிட்டுக் கூறுகிறது.
தைப் புத்தாண்டில் நம்பிக்கையோடு கால் பதிப்போம். உலகம் வாழ் தமிழ்மக்கள் வாழ்வில் அல்லல்கள் நீங்கட்டும். துன்பங்கள் தொலையட்டும். இருள் அகலட்டும். விடியல் தோன்றட்டும். கோடி இன்பங்கள் குவியட்டும். மகிழ்ச்சி பொங்கட்டும். கல்வி துலங்கட்டும். தொழில்வளம் பெருகட்டும். அறிவியல் வளரட்டும். தமிழுணர்வு ஓங்கட்டும். இனவுணர்வு மலரட்டும். 

________________________________________


தமிழர்கள் வரலாற்றில் தமிழ்ப் புத்தாண்டு எது? தையா? சித்திரையா?
                                                                         டான் அசோக்

தமிழர்கள் யாவரும் தமிழ்ப் புத்தாண்டைப் பற்றிய தெளிவின்மையோடு, எதை நம்புவது எதைப் புறக்கணிப்பது என்ற குழப்பத்தில்  சிக்கியுள்ளார்கள். தமிழக மக்கள் இந்த விசயத்தில் எக்காரணம் கொண்டும் தெளிவுபெற்றுவிடக் கூடாது என்பதில் இப்போது ஆட்சியில் இருப்போரும், அவர்க்கு அறிவுரை வழங்கி வரும் கூட்டமும்  மிகத்  தெளிவாய் இருக்கிறது. அதன்படி தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாய்  கலைஞர் அறிவித்ததை மாற்றி மீண்டும் சித்திரை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக  அறிவித்துள்ளது தற்போதைய தமிழக அரசு. இந்நிலையில் எதற்காக தமிழர்கள் தை முதல் நாளை புத்தாண்டாகக்  கொண்டாட வேண்டும் என்பது குறித்து விளக்கவே இந்தக் கட்டுரை. தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு ஏன் எதற்கு என்பதைப் பற்றியெல்லாம் ஆராயும் முன், நாம் ஒன்றைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். சித்திரை முதல் நாளில் ஆரம்பிக்கும் ஆண்டுகளின் கணக்கு சுழற்சி முறையில் இருக்கும்.
அறுபது ஆண்டுகள் மீண்டும் மீண்டும் வந்தபடியே இருக்கும். இந்த அறுபது ஆண்டுகளுக்கும் 'பிரபவ' முதல் 'அட்சய' என்று அறுபது பெயர்கள் இருக்கின்றன. இந்த அறுபது பெயர்களில் ஒன்று கூட தமிழ்ப் பெயர் கிடையாது. அனைத்துமே வடமொழிப் பெயர்கள். தமிழ் வருடங்கள் எனச் சொல்லப்படுகிற வருடங்களின் பெயர்கள் வடமொழியில் இருப்பதன் ரகசியம் என்ன? அப்படி இருக்கலாமா? அப்படி இருத்தல் உலகத்தின் மூத்தகுடியான தமிழுக்கும் தமிழர்க்கும் மரியாதையாய்  இருக்குமா? இந்த அறுபது ஆண்டு சுழற்சி முறையைக் குறித்து முதலில் கவனிப்போம். இந்த முறை வடநாட்டு மன்னனான சாலிவாகனன் என்பவனால் கிறித்துவுக்குப் பின் 78ஆம் ஆண்டில் வடநாட்டில் ஏற்படுத்தப்பட்டது. கனிஷ்கன் என்ற வடநாட்டு அரசனால் இது ஏற்படுத்தப்பட்டது என்று கூறுவோரும் உண்டு. பின்னர் தென்னாட்டில் ஆரியர்களின் ஊடுருவலால், ஆட்சியால் இந்த ஆண்டு முறை படிப்படியாகப் பரப்பப்பட்டு நிலைநிறுத்தப்பட்டது. எந்த ஓர் இனத்தவரின் ஆட்சி ஒரு நாட்டில் நிலைநிறுத்தப்படுகின்றதோ அந்த இனத்தவரின் பழக்க வழக்கங்கள், பண்பாடுகள், கலைகள் போன்றவை அந்த நாட்டின் பூர்வகுடி (தமிழ்) மக்களின்  பழக்க வழக்கங்களோடு கலந்து விடுவது இயல்பு. அந்த வகையில் இந்த சாலிவாகன முறை பின்னர் மெல்ல மெல்ல தமிழகத்தில் நடைமுறைப் பழக்கத்திற்கு வந்துவிட்டது. அறுபது ஆண்டு சுழற்சி முறை காரணமாக ஆரியர்களிடையே அறுபது வயது நிரம்பியவர்கள் 'சஷ்டியப்த பூர்த்தி' என்ற அறுபதாண்டு விழாவைக் கொண்டாடும் வழக்கம் இருப்பதைக் கவனியுங்கள். அதாவது ஆரியர்கள் உருவாக்கிய 60 ஆண்டுகளைக் கடந்து வாழ்கிறார் என்பதை இது குறிக்கிறது. ஒரு சுற்று வந்து விட்டார் என்பது இதன் கரு.
மேலும் இந்த அறுபது ஆண்டுகளுக்கான விளக்கம் மிகுந்த ஆபாசம் நிறைந்ததாகும். அபிதான சிந்தாமணி என்ற நூலில் 1392ஆம் பக்கத்தில் கீழ்வருமாறு குறிப்பிடப்படுகின்றது. ஒருமுறை நாரதமுனிவர், 'கடவுள்' கிருஷ்ணனை "நீங்கள் அறுபதினாயிரம் கோபிகைகளுடன் கூடி இருக்கின்றீரே, எனக்கு ஒரு பெண்ணையாவது தரக்கூடாதா?" என்று கேட்டாராம். அதற்குக் கிருஷ்ணன், "நான் உடன் இல்லாமல்  வீட்டில் தனியாய் இருக்கும் பெண்ணை நீ எடுத்துக்கொள் என்றாராம். இதற்கு நாரதர் உடன்பட்டு அறுபதாயிரம் வீடுகளிலும் சென்று பார்த்தார். ஆனால் எங்கும் கிருஷ்ணன் இல்லாத பெண்களைக் காண முடியாததால், நாரதர் மீண்டும்  கிருஷ்ணனிடமே வந்து அவர் திருமேனியில் மோகம் கொண்டு அவரை நோக்கி "நான் உங்களிடமே பெண்ணாக இருந்து உடலுறவு கொள்ள விரும்புகிறேன்" என்றார். கிருஷ்ணன் நாரதரை "யமுனையில் குளித்தால் பெண்ணாய் மாறுவாய்" எனச் சொல்ல, நாரதர் அவ்வாறே செய்து, ஓர் அழகுள்ள பெண்ணாக மாறினாராம் . பின் 'கடவுள்' கிருஷ்ணனுடன் அறுபது வருடம் உடலுறவு கொண்டு , அறுபது மகன்களைப் பெற்றார். அவர்கள் பிரபவ தொடங்கி அட்சய முடிய என பெயர் பெற்றார்கள். இவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வருடமாகும் வரம் பெற்றார்கள். இப்படித்தான் சித்திரை முதல் நாளில்  ஆரம்பிக்கும் புத்தாண்டு வரலாறு செல்கிறது. தமிழகத்தில் வானியலில் திறமையான அறிஞர்களை அறிவர், கணி, கணியன் என அழைத்தார்கள். அரசனுடைய அவையில் பெரும் புத்தி படைத்த 'கணி'கள் இருந்ததாகச் சிலப்பதிகாரம் கூறுகின்றது. அறிவர்'கள் குறித்துத் தொல்காப்பியரும் குறிப்பிடுகின்றார். தமிழர்கள் காலத்தைக் கணித்ததைச் சுருக்கமாகப் பார்ப்போம்.
ஆரியக் கதை இப்படி இருக்க, தமிழர்கள் காலத்தை வகுத்த விதம் பிரம்மிப்பானது. தமிழர்கள் இயற்கையை ஆதாரமாகக் கொண்டு காலத்தைப் பிரித்தார்கள். ஒரு நாளைக்கூட ஆறு சிறு பொழுதுகளாக பிரித்து வைத்திருந்தார்கள்.  வைகறை, காலை, நண்பகல், எற்பாடு, மாலை, யாமம் என்று அவற்றை அழைத்தார்கள். அது மட்டுமல்ல, அந்த ஆறு சிறு பொழுதுகளின் தொகுப்பையும் அறுபது நாழிகைகளாகப் பகுத்துக் கணக்கிட்டார்கள். அதாவது ஒரு நாளில் ஆறு சிறுபொழுதுகள் உள்ளன. அந்த ஆறு சிறு பொழுதுகள் கழிவதற்கு அறுபது நாழிகைகள் எடுக்கின்றன என்று தமிழர்கள் பண்டைக் காலத்தில் கணக்கிட்டார்கள். ஒரு நாழிகை என்பது தற்போதைய 24 நிமிடங்களைக் கொண்டதாகும்.
அதாவது பண்டைக் காலத் தமிழர்களது ஒரு நாட் பொழுதின் அறுபது நாழிகைகள் என்பன தற்போதைய கணக்கீடான 1440 நிமிடங்களோடு, அதாவது 24 மணிநேரத்தோடு அச்சாகப் பொருந்துகின்றன. தமிழர்கள் ஒரு நாள் பொழுதை, தற்போதைய நவீன காலத்தையும் விட, அன்றே மிக நுட்பமாகக் கணித்து வைத்திருந்தார்கள் என்பதே உண்மையுமாகும்.
பின்னாளில் வந்த ஆரியர்கள் ஓர் ஆண்டை நான்கு பருவங்களாக மட்டும்தான் வகுத்தார்கள். ஆனால் பண்டைக்காலத் தமிழர்களோ, தமக்குரிய ஆண்டை, அந்த ஆண்டுக்குரிய தமது வாழ்வை, ஆறு பருவங்களாக வகுத்திருந்தார்கள்.
        1. இளவேனில்           -  (தை---மாசி மாதங்களுக்குரியது)
        2.    முதுவேனில்        -  (பங்குனி - சித்திரை மாதங்களுக்குரியது)
        3.    கார்                -  (வைகாசி - ஆனி மாதங்களுக்குரியது)
        4.    கூதிர்              -  ஆடி - ஆவணி மாதங்களுக்குரியது.)
        5.    முன்பனி           - (புரட்டாசி - அய்ப்பசி மாதங்களுக்குரியது)
        6.    பின்பனி (கார்த்திகை - மார்கழி மாதங்களுக்குரியது)
மேற்கண்ட மாதக்கணக்கில் இளவேனில் என்பது சித்திரை-  வைகாசி மாதங்களுக்கு உரிய காலம் என சிலர் வாதிடுகிறார்கள். ஆனால் அது முற்றிலும் தவறு.  சித்திரை மாதத்தில் (வேனில்) வெயில் தன் அதிகபட்ச உக்கிரத்தை அடைவதால் அதை முதுவேனில் என்றும் தைமாதத்தில் தொடங்கும் வெயிலை 'இளவேனில்' எனவும் பண்டைத் தமிழர்கள் அழகாகப் பகுத்திருந்தார்கள்.  காலத்தை, அறுபது நாழிகைகளாகவும், ஆறு சிறு பொழுதுகளாகவும், ஆறு (மீணீஷீஸீ) பருவங்களாகவும் பகுத்த பண்டைத் தமிழன் தன்னுடைய புத்தாண்டு வாழ்வை இளவேனிற் காலத்தில்தான் (தை) தொடங்குகின்றான்.  இங்கே ஒரு மிக முக்கியமான விசயத்தை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்! பண்பாட்டுப் பெருமை கொண்ட மற்றைய பல இனத்தவர்களும், தங்களுடைய புத்தாண்டு வாழ்வை, தங்களுடைய இளவேனிற் காலங்களில்தான் ஆரம்பிக்கின்றார்கள். தமிழர்கள் மட்டுமல்ல, சீனர்களும், ஜப்பானியர்களும், கொரியர்களும், மஞ்சூரியர்களும் என, பல கோடி இன மக்கள் - தொன்மையான பண்பாட்டு வாழ்வினைக் கொண்ட பெருமை வாய்ந்த மக்கள்- தங்களுடைய இளவேனிற் காலத்தையே தமது புத்தாண்டாகக் கொண்டாடி வருகின்றார்கள்.
தமிழர்கள்  நாம் மட்டும் ஆரியப் பழக்கத்துக்கு மாறிவிட்டோம்! இடையில் வந்த இடைச்செருகலால் வந்த வினை இது. நம் இளவேனில் காலம் தை மாதம் தான். அதனால்தான் தை முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டு என்கிறோம். தமிழர்க்கு எதிரான சக்திகளின் சூழ்ச்சிக்குப் பலியாகாமல், தமிழின், தமிழரின் பெருமையைப் பாதுகாக்கும் பொருட்டு தமிழர் யாவரும் தை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடி மகிழ்வோம். இதுகுறித்து  பாவேந்தர் பாரதிதாசன் நமக்குத் தரும் அறிவுரையைக் கேளுங்கள்,
நித்திரையில் இருக்கும் தமிழா!
சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு
அண்டிப்பிழைக்க வந்த ஆரியக்கூட்டம்  கற்பித்ததே
அறிவுக்கொவ்வா அறுபது ஆண்டுகள்
தரணி ஆண்ட தமிழனுக்கு
தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு!

________________________________________

தமிழ்ப் புத்தாண்டு : 
சங்க இலக்கியமும் அறிஞர்களும் 
சொல்வதென்ன?

பொங்கல் விழா நாளையே தமிழர்கள் புத்தாண்டுப் பிறப்பாக பல்லாண்டு காலமாகக்  கொண்டாடி வந்திருக்கின்றனர் என்பதற்கு அறிஞர்கள் தக்க சான்றுகளாகத் தந்துள்ளனர்.
இரண்டாயிரம் (2000) ஆண்டுகட்கு முற்பட்ட கழக இலக்கியங்களில் இதற்குச் சான்றுகள் உள்ளன.
தைஇத் திங்கள் தண்கயம் படியும்  என்று நற்றிணையும் தைஇத் திங்கள் தண்ணிய தரினும் என்று குறுந்தொகையும் தைஇத் திங்கள் தண்கயம் போல் என்று புறநானூறும் தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ  என்று கலித் தொகை யும் தமிழர் வாழ்வில் தைப் பிறப்புச் சிறப்பிடம் பெற்றுள்ளதையும், ஆண்டிற்கு மாதங்களை உருவாக்கிப் பெயர்கள் சூட்டியிருப்பதை அறிய முடிகிறது.
தைப்பிறப்பாண்டு வெறும் விழாவையோ அதனாற் கிளர்ந்து எழும் மகிழ்வையோ அடிப்படையாக மட்டும் கொண்டு பிறந்ததல்ல. அறிவியல் தெளிவோடு, கதிரவன் தென்திசை நோக்கி நகர்ந்து மறுபடியும் வடதிசை நோக்கித் திரும்பும் பருவ -கால மாறுதலைக் கொண்டும் கணித்து உருவாக்கப்பட்டதாகும்.
ஆரியர் தமிழ்நாட்டிற்கு வருமுன் வான நூலை ஒரு சிறிதும் அறியார். அவர் அறிந்ததெல்லாம் திங்களுடைய வளர்ச்சி தளர்ச்சியைக் கண்டு காலத்தைக் குறிப்பிடுவது மட்டுந்தான். உவாவு (அமாவாசை)க்கு ஒரு உவா மாதம் என்று அவர்கள் கணக்கிட்டனர். அவர்கள் பல்கித் தமிழ்நாட்டை அடைந்தபோதே தமிழர்களுடைய மதி நுட்பத்தையும், கணித முறைகளையும் கண்டு வியந்து தாமும் தம் முறையைக் கையாளத் தொடங்கினர்.
அவர்கள் தங்கள் பிறை மாதங்களுக்குப் பெயர் கொடுக்க நினைத்துச் சித்திரை, வைகாசி முதலிய மாதப் பெயர்களையே பெரும்பாலும் சைத்திரம், வைகாசம் எனத் திரித்து வழங்கத் தொடங்கினர்.
சித்திரை மாதத்தில் வரும் உவா நாளுடன் முடிகிற மாதம் சைத்திரம் எனவும், இவ்வாறே ஏனைய மாதங்களுக்கும் பெயர் வைத்துக்கொள்ள ஆரிய மக்கள் சில ஆண்டுகளின் பின் தங்களின் கொள்கைக்கு மாறாகச் சைத்திரம் பங்குனியிலும் வைகாசம் சித்திரையிலும் இவ்வாறே ஏனைய மாதங்களும் முடிவதைக் கண்டு அஞ்சினர்களாய் சித்திரை முதலிய மாதங்களே நிலையானவை; ஆதலினால் அவற்றோடு தங்கள் புதிய மாதங்கள் கூடாமற் போனால் பயனற்றுப்போம் என்று தெரிந்து பங்குனியோடு முடிகிற தமது சைத்திரத்தை அதிமாதம் அல்லது பொய் மாதம் என்று தள்ளி சித்திரை மாதத்தின் உவாவுடன் முடிகிற பிழை மாதமே உண்மைச் சைத்திரம் (நிசசைத்திரம்) என்று கொள்வாராயினர்.
ஆகவே சித்திரை முதலிய பன்னிரு மாதப் பெயர்களும் ஆரியமயப்பட்டுக் கிடத்தல் அறியப்படும்.  பழந்தமிழ் மக்கள் ஓரைப் (நட்சத்திர) பெயர்களையே மாதப் பெயர்களாகக் கொண்டிருந்தனர் என்பது அறிஞர் பெருமக்களால் தெளிவுறுத்தப்படுதலாலும் பழஞ் சேர நாடான மலையாளத்தில் இவ்வழக்கே இன்றும் நடை முறையிலிருப்பது அறியப்படுதலாலும், சுறவம், கும்பம், மீனம், மேழம், விடை, ஆடவை, கடகம், மடங்கல், கன்னி, துலை, நளி, சிலை என்னும் ஓரைப் பெயர்களால் சுட்டுவதே சிறந்ததென்று தமிழ் மக்கள் கடைப்பிடித்தல் வேண்டும்! (செந்தமிழ்ச் செல்வி, சிலம்பு 25) என்று மறைமலை அடிகளாரின் நண்பர் இ.மு. சுப்பிரமணியம் (பிள்ளை) அவர்கள் கூறியுள்ளார்
முன் காலத்தில் வருடப் பிறப்பு சித்திரை முதல் நாளாக இருந்ததில்லை. தை முதல்நாள்தான் வருடப் பிறப்பாகப் பெரியோர்கள் கொண்டாடினார்கள். அந்த நாள் முதல் எல்லாருடைய வாழ்வும் பல வகையில் புதிய  வாழ்வாக இருக்க வேண்டும் என்று ஏற்படுத்தினார்கள் என்று டாக்டர் மு.வ.கூறுகிறார்.
வடநாட்டாருக்குத் தீபாவளி வருஷப் பிறப்புப் போல, தமிழ்நாட்டாருக்குப் பொங்கல் புத்தாண்டுப் பிறப்பாகும். இடைக்காலத்தில் ஆரியர் தொடர்பால், தை மாதத்திற்குப் பதிலாக, சித்திரை மாதம் புதுவருஷமாக ஆகிவிட்டது. சூரியன் தக்ஷிணாயனத்திலிருந்து அதாவது தென் திசையிலிருந்து உத்திராயனத்துக்கு அதாவது வடதிசைக்கு வரும் பருவமாறுதலை வைத்தே ஆண்டுத் தொடக்கத்தை வரையறுத்தார்கள் இயற்கை வழி வாழ்க்கை நடத்திய நம் மூதாதையர். என்று நாரண துரைக்கண்ணன் கூறியுள்ளார். (பொங்கல் தமிழ்ப் புத்தாண்டு மலர், மலேசியா 15.1.1988)
தமிழ் அரசர்களுடைய கல்வெட்டுகளிலே காணப்படும் காலக் கணக்குகள் அவர்கள் முடிசூடி ஆளத் தொடங்கிய ஆண்டிலிருந்தே கணிக்கப்பட்டுள்ளன. தமிழ் மக்களிடையே பெருவழக்கிலிருக்கும் சாலிவாகன சக வருடம் அக் கல்வெட்டுகளில் இடம் பெறவில்லை.
இச் சாலிவாகன சகவருடம் சாலிவாகனன் எனும் வடநாட்டு அரசனால் இற்றைக்கு 1880 ஆண்டுகளுக்கு முன்னர் நிலைநாட்டப் பட்டதென்பர். இவ்வரசனுக்கு முன்னர் பல்லாயிரம் ஆண்டுகளாக நயத்தக்க நாகரிகத்துடன் வாழ்ந்த தமிழ் மக்கள் தம் நாட்டுப் பெருமகன் ஒருவனுடன் இணைந்த தொடர் ஆண்டை நிலைநாட்ட முயலாதது பெரும் விந்தையாக இருக்கிறது. வட நாட்டரசன் ஒருவன் நிலைப்படுத்திய ஒரு தொடர் ஆண்டை வரவேற்று வழங்கித் தமிழினத்தின் பழமையையும் - பண்பையும், சிறப்பையும் - செல்வாக்கையும் சிதைத்து வந்தமை பெரும் வெட்கத்துக்கிடமானதாகவும் இருக்கிறது என்று இலங்கைப் பேராசிரியர் கா.பொ.ரத்தினம் விளக்குகிறார்.

________________________________________







செவ்வாய், 22 டிசம்பர், 2015

தமிழ்த்தேன் : கவிதை : கோ. பாலக்கிருட்டிணன்

தமிழ்த்தேன்

உன்னில் இருக்கும்
உயிர் உருக்கும் சுவை
உலகில் உனக்கு
இணை எவை?

பொங்கி வழியும் அமிழ்தத்தில்
பொங்கிய குமிழே!
பொங்கலுக்கே இனிக்கும்
பொன் தமிழே!

அறுசுவை என்றாலும் – அதில்
ஒரு சுவையாய் கசப்பிருக்கு.
முத்தமிழ் என்றால் – இதில்
முக்கனியின் சுவை இருக்கு.

நற்சுவை கசியும் கரும்பிருக்கு
நா நக்கும் தேனிருக்கு – தமிழே
நீ இருக்க இதெல்லாம் ஏனிருக்கு?
வேறெதற்கு?
உயிரிருக்கும் உன் சுவையைச்
சுட்டிக் காட்டுதற்கு.

பல மொழிக்கும் குரு மொழியாய்
திருவுக்கும் பொருள் தருவாய்.
தேனால் சொல்லும் மொழியாவாய்
தேனில் செல்லும் திரு நாவாய்!

கிளைமொழிகள் படைத்தத்
தலைமொழியே!
உன்னைக் கற்றால்
செழிக்கும் தலைமுறையே.

உலகில் உதித்த
முதல்மொழியே!
உன் இடத்தை நிரப்ப
வழி இல்லையே.

கலகலப்பும் பளபளப்பும்
உன்னைப் பார்த்துக்
கலகலக்கும்.

விண்ணைப் பார்த்து
தமிழென்றால்,
வெள்ளிக்கோளும்
துள்ளி ஆடும்.

தமிழே வாழ்க!
தமிழரால் வாழ்க!!
            
       கோ. பாலக்கிருட்டிணன்
        11ஆம் வகுப்பு
        அரசு மேல்நிலைப் பள்ளி
        செயமங்கலம்,தேனி மாவட்டம்.



வியாழன், 17 டிசம்பர், 2015

பூமித் தாய் - கவிதை : க. சரவணன்

     பூமித் தாய்                                
                         :       க. சரவணன்

அழகாய்ப் பிறப்பெடுத்து
அற்புத வளங்களைப் படைத்தளித்து
நுண்ணுயிர் வாழ்க்கைக்கும்
நூதனமாய் வழிவிட்ட
பூமகளே...

உன் விரல் பட்டும்
இனிய இதழ் பட்டும்
இனிமை வாழ்வைப்
பெறுகிறோம் நாங்கள்.

இருப்பினும்

அரவணைத்துக் காப்பவளை
அழிய வைக்கும் நிலை
ஏனோ தொடர்கிறது.

மனிதர்கள்
ஒரு கனம் யோசித்தால்கூட
உய்வு பெறுவாய்
பூமித் தாயே!

 க. சரவணன்
  இளம் அறிவியல்- வேதியியல்
  தேனி கலை அறிவியல் கல்லூரி
  வீரபாண்டி, தேனி.

வெள்ளி, 11 டிசம்பர், 2015

அஞ்ஞாடி : வரலாற்றின் புதுமொழி :- திருவிருப்போன்


அஞ்ஞாடி : வரலாற்றின் புதுமொழி 
                                                                      : திருவிருப்போன்
ஆண்டிக் குடும்பனுக்கும், மாரி வண்ணானுக்கும் இடையில் மலரும் நட்பில் தொடங்குகிறது வரலாறு. ‘வண்ணாரப் பயலுடன் சேருவதற்காக அடியும் உதையும் வாங்கும் ஆண்டியால் மாரியைப் பிரிந்திருக்க முடிவதில்லை. ‘ரெண்டுபேரும் ஒரு குண்டியிட்டுப் பேலுறவுகள்’ என்று ஊரே எளக்காரம் பேசுகிறது. ஓடைச் சேற்றுச் சகதியில் மாட்டிக் கொள்ளும் ஆண்டியைக் காப்பாற்றும் மாரி கடைசிவரை ஆண்டியின் மனதைவிட்டு அகலுவதில்லை. அவர்கள் போடும் பேச்சுப்பழக்கமும் விளையாடும் விளையாட்டுக்களும் உண்ணும் தின்பண்டங்களும் நம்மை கலிங்கலூருணிக்குள் இழுத்துவிடுகின்றன.
ஆண்டியும் மாரியும் வளர்ந்து கலியாணம் செய்துகொண்டு, குடும்பங்கள் வளர்ந்து பெருகி ஊர் தழைத்து – வரலாறு விரியத் தொடங்குகிறது. ரெண்டு குடும்பங்களுக்கிடையே விடாத தொந்தம் தொடர்கிறது. சம்சாரிக் குடும்பர்களின் வாழ்வும், வண்ணார்களின் பிழைப்பும் ஓவியமாகத் தீட்டப்படுகின்றன. மெதுவாக, பனையேறி சண்முகத்தின் பாடு கதைக்குள் நுழைகிறது. பனைமரத்தின்மேல் அண்ணன்கள் இருவரும் ஒருவரையொருவர் கொலைசெய்து வீழ்ந்து மாள்வதிலிருந்து அவனது பயணம் தொடங்குகிறது. ஆண்டியின் குடும்பத்துடன் வந்து இணைகிறது சண்முகத்தின் குடும்பம். இந்த பந்தமும் கடைசிவரை தொடர்கிறது.
தாது வருசப் பஞ்சம் தலைகாட்டி கலிங்கலைக் கலக்கி ஊரையே மயானமாக்குகிறது. மாரிக்கு தீர்க்க முடியாத வியாதி வந்து, பஞ்சத்திற்கு முன்னமேயே இறந்துபோகிறான். அவன் குடும்பம் பஞ்சம் பிழைக்க ஊரைவிட்டு வெளியேறுகிறது. பஞ்சத்தில் ஆண்டியின் குடும்பத்திலும் சண்முகம் குடும்பத்திலும் உயிர்கள் பலியாகின்றன.
‘பனையேறி’கள் ‘நாடார்’களாகி வளர்ந்த வரலாறு துல்லியமாக எழுந்துவருகிறது. ‘வளர்ந்த’ பின் அவர்களால் ‘கீழ்ச்’சாதியாக வாழ முடியாமல் போகிறது. மேல் சாதிக்காரர்களின் கோயிலுக்குள் நுழைந்து சாமி கும்பிடத் தோன்றுகிறது. வரலாற்றின் பிரச்சினை இங்கே தொடங்குகிறது.
நாயன்மார் கதையும், அருகர்களின் கதையும் தலைகாட்டுகின்றன. எட்டப்ப வமிசம் பரவிய கதை, கட்டபொம்மு கதை, ஊமைத்துரை, மருது சகோதரர்கள் வெள்ளைக்காரர்களுடன் போரிட்ட கதை என நீண்டு, எட்டையபுரத்து சமீன் விவகாரங்கள், இந்துக்கள் வேதத்துக்கு மாறிய பின்னணி, நாடார்கள் கழுமலைக்கோயில் ரத வீதிகளில் பல்லாக்கில் போகப் போராடியது, மறவர்களும் பிறரும் சேர்ந்து நடத்திய சிவகாசிக் கொள்ளை எனப் பல சம்பவங்கள் தொடர்கின்றன. நாடு விடுதலை பெற்றபோது நடந்த அக்கிரமங்கள் முதல் இந்திரா காந்தி சுடப்பட்டது வரை .. ஸ்… அஞ்ஞாடி…. நிறைய தகவல்கள். அதிலும் நாடார்களின் ஆலய நுழைவுப் பிரச்சினை அநியாயத்துக்கு நீண்டுகொண்டே போகிறது – 300 பக்கங்களுக்கு மேலாக. சில இடங்களில் ‘போதுமே’ என்று அசர வைக்கிறது. நிறைய ஆவணங்களிலிருந்து மேற்கோள்கள் வேறு. பூமணி, நாவலுக்காக தான் செய்த ஆய்வில் கிடைத்தவற்றை எவ்வளவு முடியுமோ அவ்வளவையும் வாசகனுக்குக் கடத்தியாக வேண்டும் என்று தீர்மானித்துவிட்டார் போலும்.
ஒரு பெரிய சுற்றுச் சுற்றி வந்து கலிங்கலுக்குத் திரும்புகிறது. சண்முகத்தின் மகன் தங்கையாவை சிவகாசிக் கலகத்தில் பறிகொடுத்துவிட்டு மகனுடன் கலிங்கலுக்கு வருகிறாள் தங்கையாவின் மனைவி தெய்வானை. அவள் குடும்பம் வளரும் கதையாகத் தொடர்கிறது. சிவகாசி, முத்துநகர் என்று ஊர் ஊராகச் செல்கிறது. புதிது புதிதாக மனுசர்கள் முளைத்துக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களது உறவுமுறைப் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. (எப்படித்தான் இத்தனை மனுசப் பெயர்களை அடுக்க முடிந்ததோ! இதற்கே தனி ஆராய்ச்சி பண்ணியிருக்கணும் போல!) ஊரில் பிற குடும்பங்களின் கதைகள் ஒட்டிப் பிணைந்து தொடர்கின்றன. பின்னால் அறிமுகமாகும் மாடப்பன் எல்லாம் துறந்து ஏகாந்த மனுசனாய் மலைநோக்கி நடப்பதுடன் ‘அஞ்ஞாடி’ முற்றுப்பெறுகிறது.
குடும்பன் சேற்றில் மாட்டிக் கொள்வதில் தொடங்கும் கதை, பள்ளன் துறவு கொண்டு விடுதலையாகிச் செல்வதில் முடிகிறது. இடையில்தான் எத்தன லொம்பலப்பட்ட பெழப்பு! கும்மரிச்சம், குதியாளம், இழவு, பகை, கொலை, கொள்ளை. மனிதன் பேலுவது, மோளுவது, சோற்றுக்கலைவது எதையும் மறைத்துப் பேச முயலவில்லை இவ்வரலாறு. எந்த வேஷமும் போடத் தேவையில்லாத மனுஷ வாழ்வில் யதார்த்தமாய் நடக்கும் அனைத்தையும் எந்த ஒப்பனையுமில்லாமல் சொல்லிச் செல்கிறது. ‘ஆஹா இது உசந்தது’ என்றோ ‘சை இது அபத்தம்’ என்றோ எதையும் வகைப்படுத்துவதில்லை. வாசகன் ஒரு கருத்தை உருவாக்கிக் கொள்ளட்டும் என்றுகூட எதிர்பார்ப்பதில்லை. அச்சு அசல் பூமணி முத்திரை!
பொதுவாக, பூமணியின் கதைகள் அவை நிகழும் இடங்களால், சூழல்களால் சொல்லப்படும் தோற்றத்தை அளிக்கும். கதைசொல்லியோ, கதாபாத்திரமோ பேசாமல், அந்த இடமே கதை சொல்வதாக ஒரு பிரமையை ஏற்படுத்தும். ‘அஞ்ஞாடி’ அப்படியில்லாமல் காலவெளியே தன்னுள் நிகழ்வதைச் சொல்லிச் செல்வது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. தன்னைத் தானே சொல்லிக்கொள்ளும் வரலாறு!
வரலாறும் புனைவும் ஒன்றையொன்று சொகமாகத் தழுவிச் செல்லும் கதையோட்டம். இதைச் சொல்ல பூமணி கையாண்டுள்ள மொழி கிறங்கச் செய்கிறது. ‘சின்னனந்தி விடியக்காலக் காளானாகப் பூத்து பெரியமனுசி’யாகிறாள். ‘ரெண்டுபேரும் பேச்சுப்போட்டால் லேசுக்குள்’ தீருவதில்லை. ‘கழுதையைக் கூட்டிப்போய் பின்புறமிருந்து சன்னஞ் சன்னமாகத் தள்ளி’ ஓடைக்குள் இறக்குகிறான். சம்பவங்களோடும், மனுசர்களோடும் நம்மை நெருக்கமாக உணரச்செய்கிறது இந்த மொழி.
பனையேறி சகோதரர்கள் ஒருவரையொருவர் மரத்திலேயே வெட்டிக்/குத்திக் கொல்லும் காட்சி, ஊமைத்துரை செயிலில் இருந்து தப்பித்த வைபவம், வெள்ளைக்காரன் ஊமைத்துரையுடன் போடும் சண்டை, கழுகுமலையில் நிகழும் கலவரம், திருவிழா/தேர்க் காட்சிகள், சிவகாசிக் கொள்ளை போன்றவை பதிவுசெய்யப்பட்டுள்ள நேர்த்தி பிரமிக்க வைக்கிறது. தேர்ந்த ஒளிப்பதிவாளனின் கைவரிசையை எழுத்தில் பார்க்க முடிகிறது.
கற்பனை செய்து பார்க்க முடியாத வகையில் நடக்கும் மூல சிகிச்சை, மதுரை மீனாட்சி கோயிலில் நுழைந்ததற்காக அடிவாங்கும் இரு குடும்பர்களின் பழிவாங்கும் படலம், குளுவனின் சவுரி முடி ரகசியம் போல சில அதிரவைக்கும் இடங்களும் உண்டு. ஆனால், பூமணி பொதுவாகவே வாசகனை அதிர்ச்சிக்குள்ளாக்குவதை எல்லாம் நம்புவதில்லை. ‘இன்னின்ன மாதிரி நடந்ததப்பா’ என்று கோடிக் காட்டிவிட்டு மறைந்துவிடுவார். கூறிச் செல்லும் சம்பவங்களும் மனுசர்களுமே நம்மை கொஞ்சம் கொஞ்சமாக அரித்தெடுப்பார்கள் – சிறிது சிறிதாக தன் வீரியத்தை வெளிப்படுத்தும் மருந்துபோல. அஞ்ஞாடியிலும் ரெம்ப விசயங்கள் அப்படித்தான். படித்துச் செல்லும்போது ‘இதும் இப்பிடியா’ என்று எங்கேயும் நாம் திகைத்து நிற்பதில்லை. ஆனால், அசைபோடும்போது ஒவ்வொன்றாய் நம்மைத் திகைப்பில் தள்ளும்.
நிசமாய் நடந்தது போல் சொல்லப்படும் புளுகுணிக் கற்பனைகள் (குறிப்பாக மாரியின் எல்லையில்லா கற்பனைகள்), கனவுகள் (மேரி மாதாவும் முருகப்பெருமானும் சந்திப்பது முக்கியமானது), கேள்விப்படாத புராணங்கள் (க்ருஷ்ணனுக்கும் சப்தகன்னிகைகளுக்கும் பிறக்கும் ஏழு பிள்ளைகள்), உலக நடப்புகளை திருமாலின் கருடனும், சிவனின் பாம்பும் சேர்ந்து பார்வையிட்டு விவாதிப்பது, நாடு விடுதலை பெற்றதை விலங்குகள் பேசிக் கொள்வது, சாமியாருடன் பேசும் நாய், ஆண்டி, கருப்பி, அவர்களது மகள் மூவரும் சவக்குழியிலிருந்து வெளியே வந்து பேச்சுப்பழக்கம் போடுவது – இவை கதைக்கு இன்னுமொரு பரிமாணத்தைக் கொடுக்கின்றன.
அஞ்ஞாடியை வெறும் தகவல் தொகுப்பு என்று சொல்லி சிலர் ஒதுக்கலாம். ஆமாம், இது ஒரு தகவல் களஞ்சியமே. இந்தக் களஞ்சியத்திலிருந்து என் தந்தைதந்தை தம் மூத்தப்பன் காலத்தில், என் நிலத்தில் வாழ்வு எப்படி இருந்தது என்பதை நான் கண்டுகொள்கிறேன். இன்றைய நிலையை நாம் எப்படி வந்தடைந்தோம் என்று தெளிகிறேன். என்றோ, விதிவசத்தால் அரசுரிமை பூண்டவர்களின் வாழ்வு பற்றிய வரலாற்றிலிருந்து நான் எதையும் பெற வாய்ப்பில்லை. என் பாட்டன் பூட்டனின் வாழ்வே என்னைத் திரும்பிப் பார்க்க வைக்கிறது. எதன் நீட்சி நான் என்று தெரிந்துகொள்ளும்போது பல திறப்புகள் உண்டாகின்றன. இதற்காகவே நான் ‘அஞ்ஞாடி’யைக் கொண்டாடுவேன்.
இத்தனை மனுசர்களும், இடங்களும், சம்பவங்களும் ஒரு நாவலில் தேவையா? நான் இப்படி எடுத்துக் கொள்கிறேன் – ஒரு தேன்கூட்டை எடுத்துக்கொண்டு அதை விளக்குவதற்கு முற்படுகிறார் பூமணி. அந்தக் கூட்டின் வாழ்வு என்பது அதில் உள்ள தேனீக்களின் கூட்டுச் செயல்பாடே. ஒவ்வொரு தேனீக்கும் பேர் சூட்டுகிறார். ஒவ்வொரு அறையையும் பெயர் சொல்லி அழைக்கிறார். கூட்டில் நிகழ்பவற்றை பட்டியலிட்டுக் கொண்டே செல்கிறார். தேனீக்கள் மூலம் கூட்டில் சேரும் தேனை வேண்டுவோர் எடுத்துக் கொள்ளலாம், சப்புக்கொட்டி சுவையை அசைபோடலாம்.
ஆண்டிக் குடும்பனை உயிர் நண்பனான மாரி வண்ணான் ‘நீங்க’ என்று மரியாதையுடன் அழைக்கிறான். ஆண்டியின் மனைவி கருப்பி ‘ஏ இவனே’ என்றுதான் விளிக்கிறாள். கதையில் ஆண்டி கடைசிவரை அவன் இவன் என்றுதான் சுட்டப்படுகிறான். ஆனால், ‘நாடான்’ பயல்களெல்லாம் வளர்ந்து ஒரு ‘மேனத்து’ வந்ததும் அவர் இவர் என்றாகிவிடுகிறார்கள்.
வெவ்வேறு சாதிகளுக்கிடையேயான உறவு, கீழ்ச்சாதிக்காரன் பொருளாதார ரீதியாக முன்னேறியபின் மேல் சாதிக்காரனுடன் தொடுக்கும் போராட்டம், எப்படியானாலும் கீழ்ச்சாதிக்காரனை மட்டந்தட்டியே வைத்திருக்கவேண்டும் என்ற மேல்சாதி மனப்பான்மை, இந்தக் கொடுமையெல்லாம் வேண்டாம் என்று வேதத்திற்கு மாறினால் அங்கேயும் துரத்தும் பகை – எல்லாம் சரடாக ஓடிக்கொண்டேயிருக்கிறது. ஆண்டியும் கருப்பியும் கழுகுமலைக்கு சாமிகும்பிடப் போகும் காட்சி அலாதியானது. விரதமிருந்து கஷ்டப்பட்டு நெடுந்தூரம் நடந்து போனால் கோயிலுக்குள் சென்று சாமியைப் பார்க்க முடியாதாம். வீதியில் பவனி வரும் சாமியைப் பார்த்துவிட்டுப் பரவசமாவதோடு சரி. அன்றைய மேல்சாதிக்காரனைப் போய் ‘செருப்புட்டு’ அடிக்கவேண்டும் என்ற ஆத்திரம் நம்மை பற்றிக்கொள்கிறது. உடனேயே, ஆண்டி சொல்லும் இரு குடும்பர்களின் கதையைக் கேட்டு ‘வக்காளி, நல்லா வாங்கினான்டா பழி’ என்று ஆறுதல் கொள்ள முடிகிறது.
சண்டீராகித் திரியும் கருத்தையன், அவன் சேக்காளி நொண்டியன், குஷ்டரோகத்தால் அவதிப்பட்டாலும் கர்த்தர் மீது கீர்த்தனங்கள் இயற்றி அவர் புகழ் பரப்பும் உபதேசியாராக அலைந்து திரியும் மரியான், கணவனை இழந்தபின் உடல்பசிக்காளாகி கருக்கலைத்துக் கொள்வதையே தொழிலாகக் கொள்ளும் ஆண்டாள், புத்திசாலிக் கிறுக்கன் கோயிந்தன், சாமியாராகியும் அல்லல்படும் சுந்தர நாயக்கர் – பல பேர் கொஞ்ச நேரம் தலைகாட்டினாலும் மறக்க முடியாதவர்கள்.
மாரியின் வண்ணான் பாட்டிலிருந்து, சுந்தர நாயக்கர் பாடும் பத்திரகிரியாரின் மெய்ஞ்ஞானப் புலம்பல் வரை சுவையான பாடல்கள் அங்கங்கே அஞ்ஞாடிக்கு இசை சேர்க்கின்றன. வெள்ளாமையும் வியாபாரமும் தீப்பெட்டி ஆபிசுக்கும் வேட்டு யேவாரத்துக்கும் வழிவிட்ட கதைபோல, தெம்மாங்கும் ஒப்பாரியும் எம்சியார் படப்பாடல்களுக்கு இடம்கொடுத்து ஒதுங்கிக்கொண்டதும் பதிவாகியிருக்கிறது. குடுமியிலிருந்து கிராப்புக்கு வந்த கதையும், காட்டித்திரிந்த ‘அடுப்பி’லிருந்து அண்ட்ராயருக்கு வந்த வகையும்தான்.
‘அஞ்ஞாடி’யைப் படித்து முடித்தவுடன் தோன்றிய மனப்பதிவே இது. அசைபோட அசைபோட அஞ்ஞாடியின் பல கூறுகளும் மனதில் எழுந்தபடியேதான் இருக்கப்போகின்றன. கூளத்தைக் கொஞ்சமாகப் பிடுங்கிப்போட்டு படிப்பவனை ரெம்ப நாளைக்கு அசைபோட வைக்கும் பூமணி, அஞ்ஞாடி என்ற போரைத்தூக்கி நம் முன் போட்டு, அசைபோடும் மாடாக வாசகனை மாற்றும் கலையில் மீண்டும் வென்றிருக்கிறார்
நன்றி: திருவிருப்போன் வலைத்தளம்

வியாழன், 10 டிசம்பர், 2015

ஒரு அரவாணியின் முதல் தமிழ் நாவல் : - பிரபஞ்சன்

                 ஒரு அரவாணியின் முதல் தமிழ் நாவல்
                                                                    பிரபஞ்சன்  
தமிழ்ப் புனைகதை வெளியில் ஒரு முக்கிய நிகழ்வாக, பிரியாபாபு எழுதிய 'மூன்றாம் பாலின் முகம்' என்று ஒரு நாவல் வெளிவந்திருக்கிறது. மிக அண்மையில் வெளிவந்த இதுவே அரவாணி ஒருவரால் எழுதப்பட்ட முதல் தமிழ் நாவல் என்கிற ஒரு ஆவணத்துக்குரிய பெருமையைப் பெறுகிறது. ஆண்களும் பெண்களும் மட்டுமே அடர்ந்த கதை வெளியில் அரவாணிகள் பிரவேசிப்பது மிகவும் ஆரோக்கியமான சூழல் என்பதோடு, சகல மனித உரிமைகளோடும் கூடிய நிகழ்வாக இது விளங்குகிறது. பிரியா பாபு ஏற்படுத்தி இருப்பது ஒற்றையடிப்பாதை எனினும், பாதை.
வரலாற்றுக் காலத்தில் இருந்து சாதி, மத மற்றும் பார்ப்பனியக் கட்டமைப்புகளால் ஒடுக்கப்பட்ட தலித்துகள் பெண்கள், சிறுபான்மையினர் மேலெழும் காலம் இது. அவர்கள் பற்றி அவர்களாலும் பிற சமூகத்தாலும் எடுக்கப்படும் கதையாடல்கள் மேலெழத் தொடங்கிவிட்டன. விளிம்பு நிலை மக்களினும் புறத்ததாக, வெளிச்சமே பரவாத இருட்டில் வைக்கப்பட்டவர்களாக அரவாணிகள் இருந்தார்கள், இருக்கிறார்கள். ஆகக்கடைசிப் படிகளில் வைக்கப்பட்டவர்கள் இவர்களே ஆவர். ஒரு சமூகமே மெலெழுந்து அவர்களை, மிகுந்த அருவருப்பு கொண்டு விலக்கியும், இழிவு படுத்தியும், கேலி கிண்டலுக்கும் வசை மொழிக்கும் உள்ளாக்கியும் தனித்து வைத்திருக்கும் ஒதுக்கலில் இருந்து மீறிச் சில ஒற்றைக் குரல்கள் வெளிப்படத் தொடங்கி இருக்கின்றன. மிகுந்த ஆளுமையும் வன்மையும் கொண்ட குரலாகப் பிரியா பாபு வெளிப்பட்டிருக்கிறார். இயக்க பூர்வமாகவும், செயல்பாட்டு அளவிலும் ஏற்கனவே அரவாணிகளின் மனசாட்சியாகவும் இயங்கிக் கொண்டிருக்கும் வெகுசிலரில் குறிப்பிடத்தகுந்த பிரியாபாபு இப்போது நாவலுடன் சமூகத்தின் மனசாட்சியுடன் ஓர் உரையாடல் நிகழ்த்த வந்திருக்கிறார்.
ரமேஷ் என்கிற பதின்பருவச் (டீன்ஏஜ்) சிறுவன், எங்ஙனம் படிப்படியாகத் தான் பெண் என்பதை உணர்கிறான் என்பதிலிருந்து கதையைத் தொடங்குகிறார் ஆசிரியர். பார்வதி வெளியே சென்று திரும்புகிறபோது, வீட்டிலிருந்து ஒரு பெண் பாடும் சப்தம் கேட்கிறது. பெண் வீட்டில் இல்லாதபோது, எங்கிருந்து பெண்பாட்டு? அவள் ஜன்னல் வழி கவனிக்கிறாள். உள்ளே அவள் மகன் ரமேஷ், அம்மாவின் ஜாக்கெட்டையும் புடவையையும் அணிந்து, அழுத்தமான மேக்கப்போடு, கண்ணாடிமுன் நின்று பாடியும் ஆடியும் களிப்பதைக் கண்டு பார்வதி அதிர்ச்சியடைகிறாள். .  இது குடும்பத்துக்கு நேரும் அவமானம் என்று துவள்கிறாள். ரமேஷின் அண்ணனும் தம்பி 'இப்படி' இருப்பதை வெறுக்கிறான். வெறுப்புக்கும், தெரு, பள்ளியில் கேலிக்கும் இழிவுக்கும் உள்ளாகும் ரமேஷ், மூத்த அரவாணியான ஜானகியம்மாளிடம் அடைக்கலம் ஆகிறான். ஜானகி, அவனுக்குப் புத்தி சொல்லி அரவாணி வாழ்க்கையின் அவலத்தைச் சொல்லி எச்சரிக்கிறாள். பார்வதி, அரவாணிகள் சிலர் சைதைக் கடைத்தெருவில் பிச்சை எடுக்கும் காட்சியைக் கண்டு, தன் மகனுக்கும் அதுவே கதி என்று பதறுகிறாள். . . பிச்சை எடுத்துப் பிழைக்கும் ஒரு அரவாணி, தன்முன் பிச்சை கேட்கும் ஒரு மூதாட்டிக்கு உதவுவதைக் கண்டு ஆச்சரியப்படுகிறாள் பார்வதி. ஒரு ரயில் பயணத்தில் பார்வதி, அரவாணிகளுக்குப் பணி செய்கிற கண்மணி என்பவளைச் சந்திக்கிறாள். அவள் மூலம், பால்திரிபு அல்லது பால் மாற்றம் பற்றிய புரிந்துணர்வை அடைகிறாள். ரமேஷை அவளால் புரிந்து கொள்ள முடிகிறது. ரமேஷ், தான் அவாவும் பெண்பாலைத் தேர்வு செய்கிறான். பாரதி என்ற புதிய பெயரை ஏற்கிறான். தன் அரவாணி சமூகத்துக்காகப் பணி செய்ய உறுதி கொள்கிறாள் பாரதி.
மூன்றாம் பாலின் முகம் நாவலின் நிகழ்ச்சி அடுக்குகள் இவை. மிகச்சரியான இடத்தில் தொடங்குகிறது கதை. பொதுவாகச் சிறுவர்கள், வளர்ச்சிப் போக்கில் அம்மா, சகோதரிகள் என்கிற வளையங்களில் இருந்து விடுபட்டு, பையன்கள், பையன்கள் சார்ந்த வெளிகளில் புழங்கி, தாங்கள் ஆண்கள் என்கிற உணர்வை எய்தி, சமூகம் அவர்களுக்கென்று ஏற்படுத்தித் தந்த பிரதேசங்களில் தங்களைப் பொறுத்திக் கொள்கிறார்கள். ஆண் இடம், ஆண் செய்கைகள் என்று எவையும் இல்லை. இவையெல்லாம் சமூகக் கருத்தியல்களின் விளைவுகள். சிறுவன் ஒருவன், தன் பதின்பருவத்தில் பெண் சார்ந்து, அம்மா, அக்கா, தங்கை மற்றும் அருகிலிருக்கும் பெண்கள் சார்ந்து, பெண்களுக்கென்று விதிக்கப்பட்டுள்ள வீட்டுப் பணிகளைச் செய்து, மனத்தளவில் தான் பெண், தனக்குள் ஓங்கி வளர்வது பெண் உணர்வே என்று  அறியத் தலைப்பட்டபோது அவன் பிரச்சினைகளை எதிர்கொள்கிறான். ஆணாக அறியப்படும் ஒருவன், தான் தன்னைப் பெண்ணாய் உணர்வதும், அதற்குத் தக நிலவும் ஆடை அணிகளை அணிவதும், அந்த மனிதனின் சுதந்திரம் என்பதைச் சமூகம் ஏற்க மறுக்கிறது. ஆண் என்பவன், எங்ஙனம் பெண் ஆகலாம் என்பதே சமூகத்தின் கேள்வியாகிறது. ஆண், பெண்ணாவது என்பது, ஆணின் அதிகாரத்தை எதிர்க்கும் சவாலாக ஆண் சமூகம் உணர்ந்து, எதிர் நடவடிக்கையில் இறங்குகிறது. அரசுகள், அவை கைக்கொள்ளும் அதிகாரங்கள் எல்லாம் ஆண்மையம் கொண்டவை. எனவே, அரவாணிகளின் இருப்பை, அவர்களின் புழங்குவெளியைச் சட்டங்களாலும் நெறி முறைகளின் பெயராலும் ஒடுக்குகிறவைகளாக அரசுகள் மாறுகின்றன. அரசு அதிகாரம் ஆகியவைகளின் குறுவடிவமாக குடும்பங்கள், தன் அரவாணிக் குழந்தையைத் தம் பகை வடிவாகக் கொள்கின்றன. அவமானச் சின்னமாகவும் கருதி அரவாணிக் குழந்தைகளைப் புறக்கணிக்கின்றன. கடும் சிறை, தாக்குதலால், ஒரு கட்டத்தில் அச்சிறுவன் வெளியேறி, தன் இனம் என்று அவன் உணரும் அரவாணிகள் குழுவில் தன்னை இணைத்துக் கொள்கிறான். இதில் அவன் அடையும் சமூகப் பாதுகாப்பே மிக முக்கியம். அவன், தன்னைப் பெண்ணாக ஆக்கிக் கொள்கிறான். அவன் விருப்பம், ஆசை, வாழ்முறை அது என்று அதை ஏற்றுக் கொள்வதே அறிவுபூர்வமான சமூகத்தின் செயல்முறை. நம் சமூகம் மூடச் சமூகம். ஆகவே அர வாணிகள் இவ்வளவு இழிவுக்குள்ளாகிறார்கள்.
அரவாணிகளில் பலர் பள்ளி வகுப்புகளையும் முடிக்காதவர்கள். அந்தப் பதின் பருவத்திலேயே அவர்களின் அடையாளக் குழப்பம் தொடங்குவதன் காரணமாக அவர்கள் குடும்பங்களிலிருந்து வெளியேறுகிறார்கள் அல்லது வெளியேற்றப்படுகிறார்கள். தொழில் அறிவும் அவர்களுக்கு வாய்ப்பதில்லை. எனவே, வேறு வழி இன்றியே அவர்கள் பிச்சை ஏற்கவும், விபசாரம் செய்யவும் நேர்கிறது. இதில் அரவாணிகளின் தவறு எங்கிருக்கிறது? அந்த அரவாணிக் குழந்தையின் குழப்பம் தலைப்படும்போதே, அதைப் பரிந்து பேசி, அக்குழந்தையைப் புரிந்து கொள்ளும் கடமையை மேற்கொள்ளாத குடும்பங்களே/சமூகமே/அதிகாரக் கூடாரங்களே தவறு செய்தவர்கள்.
ஒரு அரவாணி உருவாவது என்பது பற்றிய விஞ்ஞானத் தகவல்கள் பல புதிர்களைக் கட்டவிழ்க்கின்றன. மகாராசன் தொகுத்த 'அரவாணிகள்' என்னும் மற்றும் ஒரு முக்கிய ஆவணமான நூலில் டாக்டர் ஷாலினி நமக்குப் புதிய பல தகவல்களைச் சொல்கிறார். இந்தப் பூலோகத்தில் பிறக்கும் எல்லா ஜீவராசியும் 'ஜனிக்கும்' அந்தக் கணத்தில் பெண் பாலாய்த்தான் ஜனிக்கிறது. அந்த உயிர்க்கரு பெண்ணாகவே இருக்கிறது. அந்தக் கருவின் உடம்பில் ஒற்றை Y குரோமோசோம் வீற்றிருந்தால், அது கரு உருவான ஆறாம் வாரத்தில் டெஸ்டோஸ்டீரோன் எனும் ஹார் மோனை உற்பத்தி செய்கிறது. அந்த டெஸ்டோஸ்டீரோன் என்ற ஹார்மோன் அந்தக் கருவின் உடம்பு முழுக்கப் பரவி எல்லா செல்களையும் 'ஆண்மைப்படுத்தி' விடுகிறது. ஆறு வாரம் வளர முலைகள், மூளை நரம்புகள், கர்ப்பப்பையாகப் பிறகு வளரப் போகும் முலேரியன் குழாய்கள் என்று முழுவதுமாய் பெண்பாலாய் இருந்த அந்த சிசு, டெஸ்டோஸ்டீரோனின் உபயத்தால் மெல்ல மெல்ல மாறுகிறது. அதன் இனப்பெருக்க உறுப்புகள் ஆண்மைப்படுத்தப்படுவதால் விரைப்புறுப்பு, விந்தகம் மாதிரியான புதுப்புது உறுப்புகள் உருவாகின்றன. அதே போல, சிசுவின் மூளை நரம்புகளும் மாற்றி அமைக்கப்படுவதால் 'ஆண்' என்கிற உடல் உருவம் மூளையில் பதிகிறது. இதனை 'பாடி இமேஜ்' என்கிறோம். நம் எல்லோரின் மூளையிலும் நமது ஒவ்வொரு புற உறுப்பிற்கான உருவகமும் பதிந்திருக்கிறது.
'நான் ஆம்பிளையாக்கும்' என்று மீசை முறுக்கும் சண்டியர்கள் எல்லோருமே முதல் ஆறு வாரங்கள் பெண்ணாக இருந்து, 'பெண்மயம்' கருணையினால் ஆண்களாகப் பிழைத்தவர்கள்தான் என்பதை அறியும்போது மகிழ்ச்சி தோன்றுகிறது. அதோடு, மரபணுக்கள் கர்ப்பப்பைக்குள் செய்த யுத்தமும் மூன்றாம் பால் தோன்றக் காரணமாகிறது என்பது விஞ்ஞானம். இதற்கு அப்பன்மார்களும் அண்ணன் மார்களும் குதிப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது?
தமிழ் இலக்கணங்களான தொல்காப்பியமும் நன்னூலும் அரவாணிகள் பற்றிப் பரிசீலிக்கின்றன. என்றாலும் அவர்களது மனோபாவம் பற்றிய ஆய்வாக அவை இல்லை. இன்னும் மேலாக, அவர்களைக் கௌரவிக்கும் விதமாகவும் அவை இல்லை. இந்த உலகம், மனிதர்களின் தொகுதியால் ஆனது என்பதையும், உலகத்தின் அடிப்படை அலகாகவும் மக்கள் இருக்கிறார்கள் என்பதையும் அவை ஒப்புகின்றன. அந்த வகையில் அவை முன்னேற்றகரமானவை என்றாலும், மக்கள், ஆண்கள், பெண்கள் என இருவகைத்தானவர் என்ற அளவுக்கு மட்டும் தான் இலக்கண ஆசிரியரின் பயணங்கள் நடந்திருக்கின்றன. 'உயர்திணை என்மனார் மக்கள் சுட்டே' என்கிறார் தொல்காப்பியர். அதாவது, 'மக்கள்' என்று சமூகம் சுட்டுகிற பொருள்களை உயர்திணை என்கிறார். மக்கள் என்று கருதப்படாத பிற பொருள்களை அஃறிணை என்கிறார். மண்ணின்மேல் உள்ள உயிர்ப் பொருள்களில் மக்கள் சிறந்தவர். ஆகவே அவர்கள் உயர்திணை. உரையாசிரியர்கள், மக்கள் பற்றிய ஆராய்ச்சியை மேலும் நீட்டித்தார்கள். 'மக்கள் என்றது மக்கள் எனும் உணர்வை' என்று ஆழப்பட்டார்கள். ஆனால் பால் திரிந்த மக்களிடம் வரும்போது இந்த ஆண்களின் ஆய்வுகள் இறுக்கம் அடைகின்றன. 'ஆண்மை திரிந்து பெண்மையை ஏற்கும் பெடியை உணர்த்துதற்கு, உயர்திணைக்குரிய ஈறுகளைச் (கடைசி எழுத்துகள்) சேர்த்துக்கொண்டு, உயர்திணையாகவே பாவியுங்கள் என்கிறார் தொல்காப்பியர். குறைந்தபட்சம், பெண்மையை விரும்புகிற மக்களை அஃறிணை என்று புறக்கணிக்கவில்லை தொல்காப்பியர். ஆனால் தொல்காப்பியருக்கு ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்குப் பின்வந்த நன்னூல் ஆசிரியர், அரவாணிகள் மேல் கடுமை காட்டுகிறார்.
'பெண்போலப் பிறந்து, பெண் தன்மையை விட்டு ஆண்தன்மைகளை அவாவுகிறவர்களைப் பேடுகள் என்றழையுங்கள். அவர்களை ஆண் பாலாகவே அழைக்கலாம். எழுதலாம். அதுபோல, ஆண்போலப் பிறந்து, பெண்தன்மையை அவாவுகிறவர்களும் பேடுகளே ஆவார்கள். அவர்களைப் பெண்கள் (பெண்பால்) என அழையுங்கள். இவர்கள் பேடி என்றும் அறியப்பட்டார்கள். இவர்களை உயர்திணையாகவும், அஃறிணையாகவும் அழைக்கலாம். இது நன்னூல் இலக்கண ஆசிரியரின் திரண்ட கருத்து. நன்னூல் ஆசிரியர் ஒன்று-ஜனநாயக பூர்வமாகவும் இயங்குகிறார். இரண்டு -சமூக வழக்கையும் விமர்சனம் இன்றி ஏற்றுக் கொள்கிறார். ஜனநாயகம் என்றது, மக்கள் தாங்கள் எந்தப் பாலை அவாவுகிறார்களோ, அந்த விரும்பிய பாலாலேயே அவர்களை ஏற்றுக் கொள்ளுங்கள் என்கிறார். இது நம் இலக்கண மரபில் மிகச் சிலாக்கியமானது. ஆனால், தன் காலத்து  (எட்டாம் நூற்றாண்டில்) சமூகம், அரவாணிகளுக்கு சமூக அந்தஸ்தை வழங்க மறுத்திருக்கிறது. ஆகவே பால் திரிந்தவர்களை அஃறிணை என்றும் அழைக்கலாம் என்கிறார். தொல்காப்பியர் காலத்தில் இல்லாத இழிவு, நன்னூல் ஆசிரியர் காலத்தில் ஏற்பட்டுவிட்டது. நம் காலத்துவரை, இந்த இழிவு நீடிக்கிறது.
காதல் வரலாறு-டயன் அக்கர் மென் (தமிழில்: ச.சரவணன்) எழுதிய உலகப் புகழ்பெற்ற புத்தகம். உலக இனங்கள் காதலை எப்படியெல்லாம் வண்ணம் பூசி, வாசனை தெளித்து வளர்த்து வந்திருக்கிறது என்பதையெல்லாம் மிகுந்த ஆராய்ச்சியோடு (ஆராய்ச்சியின் நெடியே இல்லாமல்) எழுதி இருக்கிறார். கிரேக்கர்கள் வளர்த்த காதல் பற்றி நிறைய நாம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்களை எழுதி இருக்கிறார். (நமக்கு ருஷ்டி மேல் வழக்கு போடத்தானே தெரியும்?) கிரேக்கம், வாக்கெடுப்பு எடுத்து ஜனநாயகத்தை ஓம்பிய நாடு என்பதை நாம் அறிவோம். வெறும் முப்பது ஆயிரம் மக்களைக் கொண்ட ஏதென்ஸ், ஒரு தனி உரிமை பெற்ற ராஜ்யம். இந்தியா போலவே, அதுவும் ஆண்மையம் கொண்ட நாடுதான். பெண்கள், வீட்டுப் பின் கட்டுகளில், இருள்படிந்த சமையல் அறைகளில் தான் இருந்தார்கள். பாட்டுக் கலையும் நாட்டியமும் விரும்பப்பட்டன. அவை மனைவிமார்களால் கற்று வெளிப் படுத்தப்படாதவரை. விலைமகளிர் மந்தைகளாக அலைந்தார்கள். சாக்ரட்டீஸ்கள் சாதாரணமாகத் தேநீர்க்கடையில் அமர்ந்து தேநீர் அருந்தியபடி தத்துவ உரையாடல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். பிளேட்டோக்கள்  விறகு வெட்டிக் கொண்டே மாணவர்களுடன் கதைத்துக் கொண்டிருந்தார்கள் என்றெல்லாம் நாம் படித்திருக்கிறோம்தான். ஏதேன்ஸ் தெருக்களில்  சாக்கடைகளே  இல்லை. அதற்குப் பதிலாக அறிவுத் தேடலே வழிந்து ஓடின என்பதுபோன்ற சித்திரங்களே நமக்குக் காட்டப்பட்டிருந்தன. அங்கே, கிறிஸ்து பிறக்கும் முன்னர் ஆண் பெண் காதல்களைக் காட்டிலும் ஆண் ஆண் காதல்கள் அங்கீகரிக்கப்பட்ட பெருவழக்காக இருந்தன என்பதைப் பற்றிய எந்தப் பதிவும் பொதுவாக வருவதில்லை. டயன் அக்கர்ரெமன் அவ்வழக்கங்களைப் பதிவு செய்கிறார்.
கிரேக்க இலக்கியங்கள் இந்த வகை உறவுகளைப் போற்றி இருக்கின்றன. உடற்பயிற்சிக் கூடமே, கிரேக்க இளைஞர்கள் காதலர்களைத் தேர்வு செய்யும் இடமாக இருந்துள்ளன. உடற் பயிற்சிக் கூடத்தில் இளைஞர்கள் நிர்வாணமாகவே பயிற்சி செய்தனர். ஆரோக்கியமான உடற்கட்டினை அழகு என்று அவர்கள் நம்பினார்கள். தங்கள் காதலர்களை அங்கே அவர்கள் தேர்வு கொண்டார்கள். அரிஸ் டோபேன்சுடைய 'மேகங்கள்' என்ற படைப்பில் ஒரு சிறுவனுக்கு அறிவுரை கூறும் பகுதி இது:
'எப்படி அடக்கத்துடன் இருப்பது, விதைகளைக் காட்டாது அமர்வது, எழுந்திருக்கும்போது அவனது புட்டங்களினால் ஏற்பட்ட பதிவு தெரியாதவாறு மண்ணைச் சரி செய்தல், மேலும் எவ்வாறு வலுவாக இருப்பது. . . அழகு வலியுறுத்தப்பட்டது. ஒரு அழகிய இளைஞர் நல்ல இளைஞனாகக் கருதப்பட்டான். கல்வி என்பது ஆணின் காதலுடன் பிணைக்கப்பட்டிருக்கிறது என்ற இந்தக் கருத்து ஸ்பார்ட்டாவினுடைய கருத்தை ஒட்டியிருந்த ஏதென்சின் கருத்தியல் கோட்பாடாயிருந்தது. அவனைவிட மூத்த ஒரு ஆணைக் காதலிக்கும் இளைஞன் அவரைப் பின்பற்ற முயல்வான். அதுதான் அவன் கல்விப் பயிற்சியின் அனுபவ மையம். மூத்த அந்த ஆணும் இளைஞனின் அழகின் மேல் உள்ள விருப்பத்தினால் அவனை மேம்படுத்த தான் செய்யக்கூடிய அனைத்தையும் செய்வார்’
ஒரு சிறுவனின் கல்வியில் இவ்வகையான ஓரினச் சேர்க்கை ஒரு பண்பட்ட நிலை என்பது ஒரு கோட்பாடாகவே கிரேக்கப் பகுதியில் இருந்தது என்பது அக்கர்மென் குறிப்பிடும் வரலாற்றுச் செய்தி. ஆசிரியர், பழைய கிரேக்கத்தை வழிமொழிகிறார் என்பதல்ல இதன் பொருள். இன்றைய காதல் மற்றும் காமச் செயல்பாடுகள், அவைகளின் மேல் இன்றைய சமூகம் விதித்திருக்கும் அற மற்றும் சட்டக் கோட்பாடுகள் என்பவை இன்றைய அதிகாரமையங்களின் கருதுகோள்களே ஆகும். மனிதர்களின் காதல் உள்ளிட்ட அனைத்து வாழ்முறைகளும் இன்று அதிகாரம் கட்டமைக்கும் ‘பவித்திர’மாகவே எல்லாக்காலத்தும் இருந்ததாக  இல்லை,  மற்றும்  பல்வேறு  கட்டங்களைக் கடந்தே மனிதகுலம் இன்றைய நிலைக்கு வந்து சேர்ந்துள்ளது என்பதைச் சொல்வதே வரலாற்றாசிரியர்கள் நோக்கமாக இருந்தது. இது குற்றம் இது குற்றமற்றது என்கிற இருநிலைகளை, அதன் வழி குற்றமனோபாவங்களை அவ்வக் காலத்துச் சமூகமே கட்டமைக்கிறதே அன்றி, அச் செயல்கள் அல்ல.
தனி மனிதர்களின் படுக்கை  அறைக்குள் நுழைந்து சட்ட நகல்களை நீட்டிக் காட்டிக் கொண்டிருக்கின்றன அதிகாரச் சக்திகள். இது மனித உரிமை மீறல் என்பதையே அறிவுவர்க்கம் காலா காலமாகக் காட்டிக் கொண்டிருக்கிறது.
அரிஸ்டோ பேன்சின் ‘பறவைகள்’ கவிதை. ஒரு முதியவன். இன்னொருவனுக்குச் சொல்வது போல அமைந்தது.
‘நல்லது. துணிச்சல் மிக்கவனே! நடைமுறைக் காரியங்கள் நன்றாகவே உள்ளன. உடற்பயிற்சிக் கழகக் குளியல் அறையிலிருந்து புத்துணர்ச்சியுடன் வெளிவரும் என் மகனை நீ சந்தித்த போதும், நீ அவனை முத்தமிடவில்லை. நீ அவனிடம் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. நீ அவனை அணைத்துக் கொள்ளவும் இல்லை. நீ அவனது விதைகளை உணர்ந்து பார்க்கவும் இல்லை. மேலும் நீ எங்களுடைய நண்பன் என்று கருதப்படுகிறாய்’
கிரேக்கப் பெண்கள் சாப்போவை நேசிப்பவர்களாக இருந்துள்ளார்கள். பெண் ஒடுக்குமுறையில் இந்தியாவுக்குச் சற்றும் குறையாதது கிரேக்கம். அங்கேயும் பல மநுக்களும் மநு புத்திரர்களும் சாக்ரட்டீசின் அங்கியைப் போர்த்திக் கொண்டு பிரசங்கம் செய்திருக்கிறார்கள். காலம் காலமாகப் பெண்களின் பிறப்புறுப்புகளுக்கு ஆக கனமான பூட்டுகளைப் போட்டு, சாவியைத் தம் இடுப்பில் செருகிக் கொண்டு அலைந்திருக்கிறார்கள் கிரேக்க ஆண்கள். உலக ஆண்களில் முக்கால் வாசிப்பேர்கள், தங்களின் மனைவிமார்களின் அந்தரங்கங்களில் அன்னிய ஆண்கள் பிரவேசித்து விடக் கூடாதே என்ற கவலையிலேயே வாழ்ந்து சாகிறவர்களாக இருக்கிறார்கள். தமிழர்கள் 'கள்ளக்காதல்' என்ற வினோதமான வார்த்தையைக் கண்டு பிடித்திருக்கிறார்கள். காதலில் கள்ளம் ஏது? காதலில் கறுப்பு வெள்ளை இருக்கிறதா என்ன? இந்திய எய்ட்சின் எண்ணிக்கை உலக மக்களைத் திடுக்கிடச் செய்திருக்கிறது என்பதை எவ்வளவு சுலபமாக மறந்து கண்ணகியைப் பற்றிக் கவலைப்படுகிறோம் நாம்?
பெண்கள் தன்பால் புணர்ச்சி குறித்து ஒரு மேற்கோளை ரியேடான் னாஹிலிருந்து எடுத்துக் காட்டுகிறார் அக்கர்மென்.
'சுய இன்பம், கிரேக்கர்களுக்கு ஒழுங்கீனமான செயலாக இல்லாமல் ஒரு பாதுகாப்புச் சாதனமாக இருந்தது. ஆசியா மைனரில் உள்ள மிலெட்டஸ் என்ற செல்வச் செழிப்பான நெய்தல் நில நகரம், கிரேக்கர்களால் 'ஒலிபாஸ்' என்று அழைக்கப்பட்ட 'டில்டோ' சாதனங்களைத் தயாரிப்பதிலும் ஏற்றுமதி செய்வதிலும் ஒரு முக்கிய கேந்திரமாக விளங்கியது. இது ஆண் குறியின் மாற்று உரு அமைப்பு. கிரேக்கர் காலத்தில் மரத்தினாலோ, தோல் அட்டைகளாலோ செய்யப்பட்டு, உபயோகிப்பதற்கு முன் ஆலிவ் எண்ணெய் கொண்டு வழுவழுப்பாக்கப்பட வேண்டியதாக இருந்தது. கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த புராதன இலக்கிய நாடகத்தில் ஒரு காட்சி. மெட்ரோ மற்றும் கோரிட்டோ எனும் இரண்டு பெண்கள் பேசிக் கொள்ளும் காட்சி. மெட்ரோ, கோரிட்டாவிடம் டில்டோவைக் கடனாகக் கேட்கிறாள். அவள் அதை வேறு ஒருத்திக்குக் கடன் கொடுத்திருக்கிறாள். கடன் வாங்கியவள், இன்னொருத்திக்குக் கொடுத்திருக்கிறாள். . .!
உலகம், இன்று வந்து சேர்ந்திருக்கும் இந்தப் புள்ளிக்கு வர நடந்து கடந்து வந்த காலம் பல யுகங்கள் என்பதையும், இன்று விபரீதம், வினோதம் என்றெல்லாம் கணிக்கத்தக்க பல விஷயங்கள் சாதாரண நடை முறைகள் என்பதையும், ஒழுக்கத் தராசைக் கையில் வைத்துக் கொண்டு அலையும் ஒழுக்கப் போலீஸ்காரர்கள் உணரவேண்டும். பெண்கள் கையில் துடைப்பத்தையும், செருப்பையும் கொடுத்துச் சக பெண்ணை எதிர்க்கத் தூண்டும் நாசகார சக்திகள் இதை உணர வேண்டும்.
பிரியாபாபுவின் வாழ்க்கையை அவரைப் பற்றி எழுதப்பட்ட குறிப்புகளில் இருந்தும், அவர் விழிப்புணர்வு இதழுக்குக் கொடுத்துள்ள (இப்பேட்டி 'அரவாணிகள்' தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. பேட்டி கண்டவர்கள் இராஜீவ் காந்தி, ஆனந்தராஜ்) பேட்டியிலிருந்தும் தொகுத்து அறிந்து கொள்வது நல்லது. எந்தச் சூழலில் இருந்து, எப்படிப்பட்ட மனிதர் மூன்றாம் பாலின் முகம் நாவலைத் தந்திருக்கிறார் என்பதை வாசகர் அறிய வேண்டும்.
இலங்கையில் உள்ள கொழும்புவில் பிறந்த பிரியாவுக்குப் பூர்வீகம் முசிறி கிராமம். 1974-இல் இந்திய இலங்கை ஒப்பந்தம் அவரைத் தமிழ் மண்ணில் கொண்டு வந்து போட்டது. 12 வகுப்புவரை படித்தவர். பள்ளிப் பருவத்திலேயே தன் பால் வேறு பாட்டுப் பிரச்சினையால் சகல துன்பங்களுக்கும் ஆளானார். 1998இல் அறுவைச் சிகிச்சைமூலம் பெண்ணாக அடையாளம் கண்டார். அரவாணிகளுக்கான ஓட்டுரிமை வழக்கில் முக்கிய பங்காற்றியவர். 2007-இல் இவரது 'அரவாணிகள் சமூக வரைவியல்' நூலை வெளியிட்டார். கல்லூரி மாணவ மாணவிகளுக்கும் காவல்துறையினருக்கும் (இவர்களிடம் பேசுவதுதான் மிக முக்கியம்.  அரவாணிகளின் முதல் விரோதிகள் காவல்துறையே என்பதே அரவாணிகளின் கருத்து) அரவாணிகள் பற்றிய வகுப்புகள் நடத்துகிறார். பிரியாபாபு, தன்னைப் பள்ளிக் கூடத்து ஆசிரியர்கள் இரண்டு பேர் பாலியல் இச்சைக்குப் பயன்படுத்திக் கொண்டார்கள் என்கிறார். (தெய்வங்களின் வரிசையில் மூன்றாவதாக வருபவர்கள். இவர்களுக்காகத்தான் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது) வெளிநாடுகளில் வாழும் அரவாணிகள் மிக உயர்ந்த நிலையில் இருப்பதை பிரியா பாபு நினைவுகூர்கிறார். பாலின மாற்று அறுவைச் சிகிச்சை சட்டபூர்வமாக்கப்பட்டு, பெண்ணாக மாறுவது எளிதானதாக டென்மார்க், ஹாலந்து, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் நிலவுகிறது என்று கூறும் அவர், நார்வே நாடு அரவாணிகளின் சொர்க்கபூமி என்கிறார். அரவாணிகளின் இருத்தலுக்காகவும் மற்றவர்கள் அனுபவிக்கும் சகல மனித உரிமைகளையும் அரவாணிகளும் பெற வேண்டும் என்பதற்காக இயக்கபூர்வமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். பொதுப்பரப்பில் அரவாணிகள் மேல் திணிக்கப்பட்டிருக்கும் அவமானங்கள் கலைய ஊடகங்கள் மூலம், ஆஷாபாரதியுடன் இணைந்து போராடிக் கொண்டிருக்கிறார். அவரின் இந்த நாவலையும் அந்த எண்ணத்தின் நீட்சியாகவே அவர் காண்கிறார்.
அரவாணிகள், அரவாணிகளாக வாழ்வது என்பது அவர்கள் தேர்வு. அது அவர்களின் சுதந்திரம். இதில் ஏனைச் சமூகம் செய்யக்கூடியது, அவர்களுக்கு இசைவாகச் சூழலை உருவாக்கித் தருவதே ஆகும். சூழல், முன்பைவிடவும் மேம்பட்டதாக மாறிக்கொண்டிருக்கிறது. அரவாணிகள் சார்பாக ஓர் உரையாடல் தொடங்கி இருக்கிறது. தமிழக அரசு சில சாதகமான ஏற்பாடுகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. இந்தியா போன்ற பெரும்பாலும் சட்டபூர்வமற்ற தேசத்தில், சட்டபூர்வமாகவே மக்கள் மட்டும் வாழ வேண்டியிருக்கிறது. எனவே, அரவாணிகளுக்கு சட்டபூர்வமான பாலின அடையாளம் வழங்கப்பட வேண்டும். அவர்கள் ஒடுக்கப்பட்டவர்கள். அப்படியே கருதி, வேலை வாய்ப்பு, கல்வி வாய்ப்பு போன்றவற்றில் அவர்களுக்கான இட ஒதுக்கீடு அவர்களுக்கு மிகவும் அவசியம் ஆகிறது. குடும்பம் என்கிற ஒரு ஒடுக்குமுறை அமைப்பில், பெற்றோர்களால் அவர்களின் கல்வி அழிக்கப்பட்டது. தொழில் அறிவும் அவர்கள் பெரும்பாலோர்க்கு இருக்க நியாயம் இல்லை. அதற்கான சிறப்புப் பள்ளிகளும் தொழிற்பள்ளிகளும் அவர்களுக்கென்றே தொடங்க வேண்டும். பொதுப் பள்ளிகள் அவர்களுக்குப் பயன்பட முடியாது. 'அரவாணிகள் கல்வி' தனிச் சட்ட வரையறைகளுக்குள் கொண்டு வரவேண்டும். அவர்களின் உயிர்த் தேவையாக இருப்பது-வீடும் சமூகமும் புறக்கணித்த பிறகு போக்கிடம் இல்லாமல் இருக்கும் அவர்களுக்கான தங்கும் இடங்கள், வாழ்வதற்கான கொஞ்சம் பணம் இவையே. அந்தப் பணத்தை அவர்களின் உழைப்புக்கான ஊதியமாகத் தரலாம்.
விளிம்பு நிலைக்கும் மேலாகச் சிக்கிச் சீரழிந்து கொண்டு வாழ்வதற்காகப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் அவர்கள் செம்மை அடையும் வரை, சமூகம் தன்னை நாகரிகமானது என்று சொல்லிக் கொள்ளும் தகுதியைப் பெறாது.

பயன் கொண்ட நூல்கள்

*மூன்றாம் பாலின்முகம்-நாவல் 
பிரியாபாபு, சந்தியா பதிப்பகம், அசோக் நகர்,சென்னை-83
தொலைபேசி : 24896979, 65855704

*காதல்வரலாறு 
டயன் அக்கர்மென்-தமிழில் ச.சரவணன். சந்தியா பதிப்பகம்

* அரவாணிகள் 
உடலியல் உளவியல் வாழ்வியல் 
தொகுப்பு : மகாராசன் 
தோழமை வெளியீடு, சென்னை-78
தொலைபேசி : 9444302967

நன்றி: உயிரோசை.காம்

திங்கள், 7 டிசம்பர், 2015

இலக்கை அறிந்த ஈட்டி : மகாராசனின் 'கீழிருந்து எழுகின்ற வரலாறு’ நூல் குறித்த மதிப்புரை.

இலக்கை அறிந்த ஈட்டி :
மகாராசனின் 'கீழிருந்து எழுகின்ற வரலாறு’ நூல் குறித்த மதிப்புரை.
பேராசிரியர் சே. கோச்சடை

வரலாற்று உணர்வு வெள்ளையர்களுக்கு இருப்பதைப் போல இந்தியர்களுக்கு, அதிலும் தமிழர்களுக்குக் கிடையாது. ''ஒவ்வொரு மனிதனும் பல பத்தாண்டுகள் வாழ்கிறான். அவன் தன்னைப் பற்றி - தன் குடும்பத்தைப் பற்றி - தன் முன்னோரைப் பற்றி - தான் அறிந்தவற்றைப் பற்றி செய்திகளை ஒரு வரலாறாக பதிவு செய்து வைக்க வேண்டும் என்கிற வரலாற்று உணர்வு தமிழனுக்கு வரவேண்டும்” என்பதை நாடோறும் வற்புறுத்திய நாடறிந்த நல்லறிஞர் சுரதா என்று வே. ஆனைமுத்து அவர்கள் (சிந்தனையாளன் சூலை 2006) குறிப்பிடுவார். இதை நன்கு புரிந்து கொண்ட 'கீழிருந்து எழுகின்ற வரலாறுஃ நூலின் ஆசிரியர் மகாராசன் 'தமிழ்ச் சமூகத்தின் தொடர்ச்சியான வீழ்ச்சிகளுக்குத் தன் வரலாற்றைப் பதிவு செய்யாத மெத்தனப்போக்கும், வரலாற்றைப் பற்றிய போதிய புரிதல் இல்லாமையும் ஒரு காரணம்” என்கிறார். அதன் ஒரு பகுதியாக தமிழக வரலாற்றை எழுதிப் பார்க்கும் முயற்சியாக இந்த நூல் வெளியாகியுள்ளது.

பல்வேறு காலகட்டங்களில் இக்கட்டுரைகள் எழுதப்பட்ட போதிலும் இவற்றை (1) தொல்காப்பிய ஆய்வு (2) எதிர்க் கதையாடல்கள் (3) நவீன கவிதையின் அரசியல் (4) இந்திய தேசியம் பற்றிய பார்வை என்று பிரிக்கலாம்.

ஏடறிந்த வரலாறு எல்லாம் வர்க்கப் போராட்ட வரலாறே என்று 'பொதுவுடைமைக் கட்சி அறிக்கை’ கூறினாலும்கூட, உலகெங்கிலும் எழுதப்பட்டுள்ள வரலாறு ஆளும் வர்க்க வரலாறாகவே உள்ளது. அந்த வரலாறுகூட தமிழ் நாட்டுக்கு இல்லை. கல்வெட்டுகளையும் இலக்கியங்களையும் தொல்பொருள் ஆராய்ச்சியையும் வைத்துக் கொண்டு தமிழக வரலாறு எழுதப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட வரலாறு முதலில் தொல்காப்பியத்தில் தொடங்குகிறது. இரண்டு கட்டுரைகள் தொல்காப்பியத்தை ஆராய்கின்றன. தொல் காப்பியம் இலக்கண நூலாகும். அது வரையில் வழக்கில் இருந்தவற்றைத் தொகுத்து வகைப்படுத்தும் வேலையைத் தொல்காப்பியர் செய்திருக்கிறார். 'இலக்கியம் கண்டதற்கு இலக்கணம்” செய்தார். ஆனால் 'அர்த்த சாஸ்திரம்” எழுதிய கௌடில்யர் அப்படியல்லாமல் வாழ்க்கை நெறிக்கான சட்ட திட்டங்களை அவரே வகுத்தார். எனவே சாணக்கியரைப் பார்க்கிற கண்ணோட் டத்தில் தொல்காப்பியரைப் பார்க்க முடியாது.

'சமூகப் படி நிலைமைகளை’ சாணக்கியர் நியாயப்படுத்தினார்; தொல்காப்பியர் சுட்டிக் காட்டுகிறார்” எனலாம். நூலாசிரியர் குறிப்பிடுவதைப்போல நால் வருணத்திற்கான கருத்தியல்களைத் தொல்காப்பியம் 'உருவாக்கி வைக்கவில்லை. எப்பேர்பட்ட மெய்யியலாரும் எல்லாக் காலத்துக்குமான மெய்யியலைத் தரமுடியாது. அவர்தன் காலத்தை மிஞ்சி ஒரு குறிப்பிட்ட வரம்பு வரையிலேயே சிந்திக்க முடியும். அப்படிச் சிந்திக்கிறபோது, அக்காலத்திய சமூக முரண்பாடுகளில் முற்போக்கு சக்திகளின் பக்கம் அவர் நிற்கிறாரா என்று பார்த்து அவரை எடை போட வேண்டும். சேக்ஸ்பியரின் நாடகங்களை அப்படித்தான் மார்க்ஸ் கண்டு வரவேற்றார்.

தொல் பொதுவுடைமைச் சமூகத்தை விடவும் நில மாண்ய சமூகமும், இதைவிட முதலாளியியமும் முற்போக்கானது என்கிறபோது அந்தப் பொருளில் தான் நாம் கூறுகிறோம். அப்படிப் பார்க்கும்போது எழுத்து, சொல் அதிகாரங்களை அவர் இன்றைய மொழியியல் அடிப்படைகளுக்கும் பெரிதும் பொருந்துமாறு வரையறுத்திருப்பது பாராட்டத்தக்கது. பொருளதிகாரத்தில் அன்றைய சமூக வாழ்க்கையைத் தொகுத்துத் தந்துள்ளார். அதனால்தான் 'என்மனார் புலவர்” என்பதைப் போன்ற கூற்றுகள் சூத்திரங்களில் இடம் பெறுகின்றன. எனவே வரையறைகள் செய்து ஒழுங்கு படுத்துகிற சமுதாயக் கட்டுமானத்தின் மய்யமாகவும், அதிகார அமைப்பாகவும் இலக்கணப் பனுவல்கள் இருந்தன என்பது ஏற்கத்தக்கதன்று.

ஐவகை நில ஒழுக்கத்தைக் கைக்கொண்டு தமிழர் வாழ்ந்த அக்காலத்திலேயே ஆரியக் கலப்பால் நால் வருணப் பாகுபாடு நுழைந்துவிட்டது. இந்த மயக்கம் பொருளதிகாரம் முழுவதும் விரவிக் கிடக்கிறது. இந்த இயல்பை நூலாசிரியர் மிகுச் சிறப்பாக வெளிப்படுத்தி யுள்ளார்.

இருபெரும் வர்க்கங்களாகப் பிளவு பட்டிருந்த தமிழ்ச் சமூகத்தில், ஆளும் வர்க்கத்தின் வாழ்க்கையையும் சமூக மதிப்பீடுகளையும் மட்டுமே தொல்காப்பியம் பதிவு செய்துள்ளது என்பது குறைபாடுதான். 'உயர்ந்தோரையும், அவர்களுடைய வாழ்க்கையையும் வழக்கையும் ஆவணப் படுத்தியுள்ள தொல்காப்பியம் பெரும்பான்மையாக உள்ள உழுதுண்போரை, 'இழிஃசனர் என்று ஒதுக்கியே வைத்துள்ளது. சமணமும் பௌத்தமும் அப்போதே வளர்ச்சியடைந் திருந்தன. அந்தச் சமயங்களின் பகுத்தறிவுக் கண்ணோட் டத்தில், வெளியில் இருந்து செயல்படும் அறியவொண்ணாத ஆற்றலே சமூக இயக்கத்திற்கான காரணம் என்று கூறாமல், அகக் காரணங்களை அலசுகிறது எனலாம். அது போல தொல்காப்பியம் சமூக ஏற்றத் தாழ்விற்குப் பிறப்பை அடிப்படையாகக் கொள்ளவில்லை என்பதை ஆசிரியர் சரியாகக் காட்டுகிறார்.

தொல்காப்பியம் மேல்தள மக்களைப் பற்றிய சிந்தனைகளை மட்டுமே பதிவு செய்துள்ளது. தொல்காப்பியம் காட்டும் பெண்களும் மேல்தட்டு மக்களைச் சார்ந்தவர்களே!

தொல்காப்பியம் காட்டும் சமூகம் அரசுகள் உருவான நிலமானியச் சமூகமாகும். இச்சமூகத்தில் முந்தைய தொல் பொதுவுடைமைச் சமூகத்திலிருந்த தலைமை நிலையை இழந்த பெண்கள் 'மனையுறை மகளிர்” ஆகிவிடடனர். எனவே பெண்களும் ஒடுக்கப்பட்ட பிரிவினர் ஆகிவிட்டனர்.

'நிலம் ஆண்களின் உடைமையாக மாற்றும் மாறுகின்றபோது, பெண்ணும் ஆண்களின் உடைமையாக மாற்றப்பட்டாள்” என்று நூலாசிரியர் மகாராசன் சரியாகவே சுட்டிக் காட்டுகிறார். உற்பத்தி, மறு உற்பத்திக்கான கருவிகளை அடக்கியாளும் அதிகாரம் ஆண்களிடம் சேர்ந்தது. மேல்தட்டு பெண்களைப் பற்றிய சிந்தனைகளைப் பதிவு செய்திருந்த போதிலும், சனநாயக உரிமை உள்ள இக்காலத்தில் சமூகத்தின் அடித்தட்டு மக்களும் மேல்நோக்கி நகரும் போக்கில் இக்கருத்தியல்கள் அடித்தட்டு பெண்களுக்கானவையாகவும் மாற்றப்படுகின்றன. தம்மீதான ஒடுக்கு முறைக்கு எந்தப் பார்ப்பனியம் காரணமாக உள்ளதோ, அந்தப் பார்ப்பனிய சடங்குகளை முன்னிறுத்தித் தலித்துகள் உட்படப் பெரும்பான்மை ஒடுக்கப்படும் வர்க்கம் திருமணம் போன்றவற்றை நடத்துகிறது. இது விரும்பியே நடக்கிறது. இதைப் போலவே, பெண்களும் விரும்பு ஏற்கும் வண்ணம் அடிமைத்தனம் அவர்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது. அந்தக் காலத்தில் தனித்தனியே சில மீறல்கள் நடந்தன. எனினும் இப்போது உள்ளதைப் போன்ற பரவலான எதிர்ப்பு கிளம்பவில்லை. தொல்காப்பியம் பெண் மீதான அதிகாரத்தை விமர்சனமில்லாமல் பதிவு செய்துள்ளது. இதைச் சிறப்பாக மகாராசன் விளக்கியுள்ளார்.

ஒடுக்கப்பட்டவர்களின் நிலையிலிருந்து தொல்காப்பியத்தை நூலாசிரியர் நன்றாக ஆய்வு செய்துள்ளார். எனினும் அவர் மார்க்சிய, லெனினிய நோக்கில் ஆராய வேண்டுமே ஒழிய, இன்றைய முற்போக்கு சிந்தனைகளையும் பெண்ணிய சிந்தனைகளையும் அந்நூல் கொண்டிருக்கவில்லை என்று பார்க்கக்கூடாது. தொல்காப்பியம் என்பது நம் காலத்து நகையைப் போன்றது. அதிலுள்ள தங்கத்தை உருக்கி புதிய நகை செய்யலாம். அதிலுள்ள சிறந்த சிந்தனைகளுக்காக அதை மறுவார்ப்புச் செய்ய வேண்டுமே ஒழிய, அப்படியே ஏற்பதோ, அப்படியே புறக்கணிப்பதோ கூடாது. தொல்காப்பியம் போன்ற அறிவியலடிப்படையிலான இலக்கண நூல் அமைந்தது நம்மொழி, இனத் தனித் தன்மையைப் பேணக் காரணமாகிவிட்டது. இது நம் முன்னேற்றத்துக்குத் தடையாக இருக்கும் இடங்களைக் காண்பதும் மீறுவதும் நம் கடமை.

தமிழக வரலாற்றில் ஒடுக்கு முறைக்கு எதிரான மரபு செழுமையாகவே இருந்துவந்துள்ளது. பார்ப்பனிய வைதிக மரபுக்கு எதிரான சமண பௌத்தக் கருத்துக்கள் இங்கு ஆழமாக வேரோடி இருந்தன. அதை அயோத்திதாசப் பண்டிதரைப் போன்ற அறிஞர்கள் சிறப்பாகக் கொணர்ந் துள்ளனர். ஆனால் இடைப்பட்ட காலத்தில் பார்ப்பனியம் வெற்றியடைந்து எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றி விட்டது. விதிவாதம் பேசி சுரண்டப்படுகிறவர்களும் அதை ஏற்று அடங்கச் செய்துவிட்டது. இப்போது அந்த அடக்குமுறைக்கு எதிரான கலகக்குரல்கள் தலித்தியமாகவும், பெண்ணியமாகவும் பாட்டாளிவர்க்கக் குரலாகவும் ஓங்கி ஒலிக்கத் தொடங்கிவிட்டன. தொழில் வளர்ச்சி நகரங்களில் ஒருவகையிலும், சிற்றூர்களில் பழைய கொடூரமான வகையிலும் தலித்துகளை ஒடுக்குகிறது. இதைச் சிறந்த எடுத்துக்காட்டுகளின் மூலம் மூன்றாவது கட்டுரையில் விளக்குகிறார். எல்லாம் விதிப்பயன் என்று ஒடுங்கிப்போனது அந்தக்காலம்.

'எதையும் செய்யப் போவதில்லை நான்.....”

'எனக்கு பூட்டிய இழிமுகத்தை மட்டுமல்லாது

நீயணிந்து கொண்ட உயர் முகத்தையும்

கிழித்துக் கொண்டிருப்பது தவிர’


என்று இளைஞர்கள் எழுந்துவிட்டனர். ஒரு காலத்தில் óஇங்கிருந்த நிலமானிய உற்பத்திக்கு உதவிய சாதிப் பிரிவினையே இன்றைக்கு ஒட்டுமொத்த சமூகத்தின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாகிவிட்டது. அதைச் சமூகத்தின் எல்லாப் பிரிவினரும் சேர்ந்து நொருக்கியிருக்க வேண்டும். இங்கு இப்போது தலித் ஆண்களும் பெண்களும் ஒடுக்கு முறைக்கு எதிராக கிளர்ந்தெழுவது ஒட்டுமொத்த சமூகத் துக்குமே நல்லது. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் எல்லாவகையான சர்வாதிகாரங்களையும் அழித்தொழிப் பதைப்போல தலித்துக்களின் விடுதலை எல்லோருக்குமான விடுதலையாக மாறும் என்பதைச் சரியாகவே இனங்காட்டியிருக்கிறார்.

“'எதிர்க் கதையாடல்களின் தகர்ப்பில் உருவாகும் மாற்றுகள்” இன்றைக்கு ஆளும் வர்க்கங்களின் கதையாடல்களை எதிர்ப்பவர்களைச் சுட்டுகிறார். உண்மையில் நமது கதையாடல்கள்தான் நம் மண்ணுக்கே உரியவை. அலோபதி மருத்துவம் ஆளும் வர்க்க மருத்துவம் ஆன பிறகு நம் மண்ணுக்கே உரிய, சித்தம், ஆயுர்வேதம், யுனானி போன்றவை மாற்று மருத்துவமுறைகள் ஆகிவிட்டன. இதைப்போன்ற கொடுமைதான் எதிர்க்கதையாடல் என்பதும், ஒடுக்கப்பட்ட மக்களுடைய கதையாடல்களே நேர்க்கதையாடல்கள். பார்ப்பனிய கதையாடலே எதிர்க்கதையாடல். எதிரியின் வரையறையையும் அளவுகோலையும் கொண்டு நம்மை நாமே மதிப்பிடும் இழிநிலைக்கு உள்ளாகிவிட்டோம். ஒடுக்கப் பட்டோர் தங்களுடைய மூல வேர்களைத் தேடும் முயற்சிதான் தம் குலதெய்வங்களைக் காண்பது ஆகும்.

நிறுவன சமயங்கள் மற்றும் சடங்கு முறைகளுக்கு நேர் எதிரானவை இனக் குழுக்களின் மெய்யியலும் சடங்கு முறைகளும் ஆகும். இவர்களுக்கு தெய்வமும் உறவினர், நண்பரைப் போலத்தான் . என்ன நடந்தாலும் தெய்வச் செயல் என்று ஒடுக்கப்பட்ட மக்கள் இருப்பதில்லை. 'ஒனக்குக் கண்ணு அவிஞ்சு போச்சாஃ என்று தெய்வத்தையே கேள்வி கேட்கும் மக்கள் அவர்கள். ஏனென்றால் ஒடுக்கப்பட்டோரின் தெய்வங்கள் எல்லாம் 'செத்துச் சாமியாகிவிட்ட மூதாதையர்தாம்”. கிராமங்கள் நகர் மயமாவதையும் அதனால் விளைகிற பண்பாட்டு மாற்றங் களையும் பதிவு செய்கிற கவிதைகளை எடுத்துக் காட்டுகிறார் நூலாசிரியர். படிமுறை அமைப்பிலான சாதி ஆதிக்கத்தை ஒழிக்க, ஒடுக்கப்பட்ட சாதிகள் தமக்குள் இருக்கிற வேற்றுமைகளை ஒழிக்க வேண்டும் என்கிறார் கவிஞர் அபிமானி.

ஆனால் நம் பிறந்த மண், நம் தொல் பண்பாடு ஆகியவற்றை உயர்வாகப் பார்க்கும் போக்கு, நம்மை மீண்டும் இருண்ட காலத்துக்கே இட்டுச் செல்லும். பழம் பெருமை பேசுதல் புதுப் பெருமைகளை உருவாக்கு வதற்காக அமைய வேண்டும். தொழில் வளர்ச்சி வரவேற்கத் தக்கது. ஆனால் தொழில் துறைக் கழிவுகளும் திட்டமிடாத நகர்மயமாதலும் மண்ணைக் கெடுப்பவை. கிராமத்தில் உள்ளவர்களின் அன்பும் பற்றும் பண்பாடும் உயர்வானவை. ஆனால் வளர்ந்துவரும் சமூகச் சிக்கல்களைத் தீர்க்க இயலாதவை. எனவே நகர்மய மாதலினூடே, தொழில் வளர்ச்சியினூடே இயற்கையைக் கெடுக்காத, உயிர்ம வேளாண்மைக்கு உறுதுணையான கொள்கைகளை நடைமுறைப்படுத்துவது நம் கடமையாகும். அப்படிப்பட்ட கவிதைகள் சிலவற்றையும் சேர்த்துப் பார்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

வரலாறு எழுதும்போது வாய்மொழித் தரவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது நல்லது என்று நூலாசிரியர் நினைக்கிறார். ஆனால் தனிச் சாதியினரின் வாய்மொழி மரபுகள் எல்லாம் கிட்டத்தட்ட ஒன்றுபோல அமைந் திருப்பதைக் காணலாம். அவற்றில் மேல்நிலையாக்கக் கூறுகள் விரவி உள்ளன. எனவே, களஆய்வு, நாட்டார் வழக்காறுகள் தொல்லியல் சான்றுகள், கல்வெட்டுகள், பிற நாட்டாரின் குறிப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் உற்பத்தி முறை சார்ந்த வரலாறு, - பெரும்பான்மை உழைக்கும் மக்களின் வரலாறு எழுதப்படவேண்டும்.

கிருத்தவ சபைகளில் சேருகிறவர்களின் குடும்பக் கொடிவழி பதிவுசெய்யப்பட்டுப் பேணப்படுகிறது. அவர்கள் தங்களுடைய முன்னோர்களின் பெயர்களை அரிய முடியும். இந்துக்களிடம் அந்த வழக்கமில்லை. இனியாவது ஒவ்வொரு வரும் தங்கள் கொடிவழியே (எங்ய்ங்ஹப்ர்ஞ்ஹ்) முடிந்தவரையில் தொகுக்க வேண்டும். இது தனிமனிதராகச் செய்யக் கூடியதில்லை. ஒருவர் தன் கால் வழியைத் தேடிப் பின்னோக்கிச் சென்றால் அது ஒரு சாதியின் வரலாறாகவும் சாதி கலந்த சமூக வரலாறாகவும் அமையும். இதைத் தனிமனிதர்கள் தொடங்கிச் செய்ய வேண்டும். இது உருப்பெறும்போது குடும்பங்களின் வரலாறு, ஒடுக்கப்பட்டோர் வரலாறு உருவாகும்.

நவீனக் கவிதைமொழி பற்றிய கட்டுரையில் கவிஞர் அபியின் நேர்காணலோடு நின்று, தன்னுணர்ச்சிப் பாடல்களை, அதுவும் அரசியலற்ற கவிதைகளை ஆராய்கிறார். நவீன கவிதை என்பது புறவயக் கவிதைகளை புறக்கணிக்க மாட்டாத சமூகம் சார்ந்த கவிதை என்பதே இதன் சிறப்பு. அத்தகைய கவிதைகளைப் பற்றியும் எழுதியிருக்க வேண்டும். பழைய மரபுகளைக் கடந்து புதியனவாக வரும் நவீனம் உற்பத்தி முறை சார்ந்தே உருவாகிறது. இதை இன்னமும் விரிவாகச் செய்திருக்கலாம்.

பெண்மொழி எழுத்துகள் பற்றி நிறையப் பேசப்படும் காலம் இது. ஆனால் ஊடகங்கள் ஒடுக்கும் வர்க்கத்திடம் உள்ளன. அங்கும் அதிகாரம் ஆண்களிடமே உள்ளது. எனவே பெண்கள் ஆண்களின் பார்வையில் விமர்சிக்கப் படுகிறார்கள். பெண்கள் தம் உடற்கூறு மாற்றங்களைப் பற்றியோ உணர்வுகளைப் பற்றியோ பேசவிடாமல் ஆண்களால் தடுக்கப்படுகின்றனர். அதை மீறுகிற போக்கில் பெண்கள் கூடக்குறைய எழுதிவிட்டுப் போகட்டுமே ஆண்கள் அப்படி எழுதும்போது பொறுத்துப் போக வில்லையா? பெண் தன் உடல் மீது தான் மட்டுமே ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பது மட்டுமே பெண்ணியம் ஆகாது. பெண்ணுக்கு அக வாழ்க்கையைப் போலவே புற வாழ்க்கையும் உண்டு. அகவாழ்க்கையிலும் பாலியல் தவிர்த்த எத்தனையோ உண்டு. ஆனால் இக்கட்டுரையில் காட்டப்பட்டுள்ள கவிதைகளைப் படிப்போர்க்கு பெண் எழுத்து என்பது 'பாலியல் எழுத்துகள்” என்ற கருத்து உருவாகும்.

பெண்ணியம் என்பது அனைத்துத் துறையிலும் ஆண்-பெண் சமத்துவம் கோருவது. ஆணோடு சேர்ந்து அனைத்துத் துறைகளிலும் முன்னிலையில் நிற்கும் புறவாழ்க்கையையும், அவளது அக வாழ்க்கையின் பிற கூறுகளையும் சுட்டிக்காட்டுவதாக உள்ள கவிதைகளையும் எடுத்துக்காட்டியிருக்கலாம். இக்குறை பாட்டை இனிவரும் கவிதைகளில் களைவார் என நம்பலாம். ஏனெனில் ஏற்கனவே பெண்ணைப் பாலியல் நுகர் பொருளாகக் கட்டமைத்துள்ள ஆண் ஆதிக்க வரையறைக்குள் பெண்தானே சென்று விழுவதைப் போல இக்கட்டுரைகள் உள்ளன. தமிழ்க் கவிதைகளைப் பற்றிய திறனாய்வு, சிறப்பாக அமைந்துள்ளன. எனினும் 'தமிழ்ப் புதுக்கவிதைகள்” சமூகத்தின் கடைநிலைகளைப் பற்றிப் பேசுகின்றனஃ என்ற கட்டுரையாசிரியரின் கூற்று முற்றிலும் ஏற்கத் தக்கதில்லை. தொடக்கத்தில் அப்படி இருந்தாலும், இப்போது வெளிவரும் கவிதைகள் பலதரப்பட்டவையாக உள்ளன.

இந்திய தேசம் பற்றிய கட்டுரை சில நூல்களை மட்டுமே ஆதாரமாகக் கொள்ளாமல் ஆழமாக எழுதப்பட்டிருந்தால் சிறப்பாக அமைந்திருக்கும். ஞான அலாய்சியஸின் தேசிய இனச் சிக்கலைப் பற்றிய நூல் சிறப்பாக உள்ளது. பழைய மார்க்சிய லெனினியக் கட்டுரைகளையும் உள்வாங்கிக் கொண்டு இன்னும் சிறப்பாக எழுத வேண்டும். பார்ப்பனியம் தன் தேவைக்காக இந்திய தேசம் என்ற கருத்தியலை முன்வைத்தபோதும், இங்குள்ள பெரும்பான்மை மக்கள் அதை ஏற்க வேண்டிய புரவயக் காரணங்கள் என்ன? ஒரு பரந்த நாடு இருப்பதன் நன்மைகள் என்ன? பல தேசிய இனங்கள் ஒன்று கலந்து அமெரிக்க தேசம் எப்படிக் கட்டியமைக்கப்பட்டது. என்பதையெல்லாம் கவனத்தில் கொள்ளவேண்டும். மொத்தத்தில் 'கீழிருந்து எழுகின்ற வரலாறுஃ நல்ல முயற்சி. தோழர் குருசாமி மயில் வாகனன் சொல்லியிருப்பதைப் போல தன் உறையில் இருந்து வாளை உருவி வீசிய கன்னிப் போரிலேயே வெற்றி பெற்றிருக்கும் மகாராசன் மேலும் மேலும் வளர்ந்து பொழிவு பெறுவார் என்று நம்புகிறேன்.

       நன்றி: கவிதாசரண் இதழ், 2007
                       கீற்று.காம்

வெள்ளி, 4 டிசம்பர், 2015

மகாராசனின் கீழிருந்து எழுகின்ற வரலாறு

மகாராசனின்
     கீழிருந்து  எழுகின்ற வரலாறு : நூல் மதிப்புரை.
      _ சுந்தர்      
                                                                       
                                                         

      
வரலாற்று உணர்வு வெள்ளையர்களுக்கு இருப்பதைப் போல இந்தியர்களுக்கு, அதிலும் தமிழர்களுக்குக் கிடையாது. "ஒவ்வொரு மனிதனும் பல பத்தாண்டுகள் வாழ்கிறான். அவன் தன்னைப் பற்றி - தன் குடும்பத்தைப் பற்றி - தன் முன்னோரைப் பற்றி - தான் அறிந்தவற்றைப் பற்றி செய்திகளை ஒரு வரலாறாக பதிவு செய்து வைக்க வேண்டும் என்கிற வரலாற்று உணர்வு தமிழனுக்கு வரவேண்டும்" என்பதை நாடோறும் வற்புறுத்திய நாடறிந்த நல்லறிஞர் சுரதா என்று வே. ஆனைமுத்து அவர்கள் (சிந்தனையாளன் சூலை 2006) குறிப்பிடுவார். இதை நன்கு புரிந்து கொண்ட 'கீழிருந்து எழுகின்ற வரலாறுஃ நூலின் ஆசிரியர் மகாராசன் 'தமிழ்ச் சமூகத்தின் தொடர்ச்சியான வீழ்ச்சிகளுக்குத் தன் வரலாற்றைப் பதிவு செய்யாத மெத்தனப்போக்கும், வரலாற்றைப் பற்றிய போதிய புரிதல் இல்லாமையும் ஒரு காரணம்என்கிறார். அதன் ஒரு பகுதியாக தமிழக வரலாற்றை எழுதிப் பார்க்கும் முயற்சியாக இந்த நூல் வெளியாகியுள்ளது.
நூலாசிரியர் மகாராசன் அவர்கள் "இங்குள்ள கலை, இலக்கியம், வரலாறு, பண்பாடு, மொழிக்கூறுகள், அரசியல் பொருளாதாரம், ஊடகங்கள் யாவும் ஒடுக்குண்டவர்களுக்கு ஆனதாக இல்லை என்கிற போது... கீழிருந்து எழுகின்ற வரலாறு எனும் இந்நூல் அடித்தளம் குறித்த சில பதிவுளை முன்வைக்க முயலுகிறது" என்று தன் முன்னுரையில் கூறியிருப்பது மிகவும் சரியாக உள்ளது. அதற்காக அவர் "கல்விப்புல, பொது அரங்குகளில் முன் வைக்கப்பட்ட கட்டுரைகளையும், பல்வேறு சிற்றிதழ்களில் வெளிவந்த கட்டுரைகளையும் விரிவாக்கிச் செப்பம் செய்த 9 கட்டுரைகள் மட்டுமே இந்நூலில் இடம் பெற்றுள்ளன" என்று குறிப்பிட்டிருக்கிறார். கடினமாக உழைத்து இந்நூலைப் படைத்துள்ளார்.
முதல் 2 கட்டுரைகளும் தொல்காப்பியத்தைப் பற்றி எழுதப்பட்டவை. சமுதாயத்தின் படிநிலையில் உயர்ந்தோர், தாழ்ந்தோர் எனும் வேறுபாட்டினை அடையாளம் காட்டுவதோடல்லாமல், தொல்காப்பியம் காலந்தொட்டு உள்ள இலக்கண நூல்கள் உயர்ந்தோரைச் சார்ந்தே இயங்குகின்றன என்று முதல் கட்டுரையில் கூறுகிறார். 2-வது கட்டுரை "தொல்காப்பியத்தில் பெண்-ஆண் பற்றிய கருத்தாக்கம்." அதில் ஆணாதிக்கச் சிந்தனைகள் எவ்வளவு மோசமாக உளளன என்பதைக் குறிப்பிடுகிறார்.
"கீழிருந்து எழுகின்ற வரலாறு" கட்டுரையில "சமூகத்தின் வரலாறு மேல்தளத்திலிருந்து தொடங்காமல், கீழ்த்தளத்திலிருந்து தொடங்க வேண்டும்... அதுதான் உண்மையான வரலாறாக இருக்க முடியும்" என்று கூறும் ஆசிரியர் "மக்களின் சொலவடைகள் விடுகதைகள், சொல்லாடல்கள் முதலியவற்றையும், மக்களிடம் இருந்து கொண்டிருக்கும் பழக்க வழக்கங்கள், சடங்குகள், நம்பிக்கைகள், வாழ்வு முறைகள், அனுபவங்கள் என மக்களிடமிருக்கும் தரவுகளையும் சேகரித்துக் கொண்டு வரலாறு எழுதப்படவேண்டும்" என்று கூறுகிறார். "நிறுவன சமய மரபுகளைப் பொறுத்தவரையில், அவைகள் செயற்கையாக உருவாக்கப்பட்டவை. ஒடுக்கப்பட்ட மக்களின் சமய மரபுகள் யதார்த்தமானவை. வாழ்வியலோடு நெருங்கிய தொடர்புடையவை. வாழ்க்கையை எதிரொலிப்பவை" என்பதுடன் "இந்துத்துவ எதிர்நிலைப் பண்பாட்டு மரபுக் கூறுகளைக் கொண்டிருப்பவை" என்று கூறுகிறார்.
"தனக்குச் சாதகமானவற்றைப் புனிதம் எனவும், பிறவற்றை எல்லாம் தீட்டு எனவும் வகைப்படுத்தி வைத்திருக்கிறது பார்ப்பனீயம். இத்தகைய மேலாதிக்கச் சிந்தனைதான் சமூகத்தின் அடிஆழம் வரை பரவியிருக்கிறது. "நாட்டார் மரபு" என்றழைக்கப்பெறும் வாய்மொழி மரபு ஒரு புறமும், செவ்வியல் என்றழைக்கப்பெறும் எழுத்து மரபு இன்னொரு புறமும் மக்களிடையே புழக்கத்தில் இருந்து வருகின்றன. சாதி ரீதியாக, பொருளாதார ரீதியாக, பாலின ரீதியாக ஒடுக்குண்டு கிடக்கும் உழைக்கும் பெரும்பான்மை மக்களின் பண்பாடுகள், நம்பிக்கைகள், கலை இலக்கிய வெளிப்பாடுகள், வாழ்வியல் நியதிகள், பட்டறிவு வெளிப்பாடுகள் போன்றன எல்லாம் இழிவானவை, தரம் குறைந்தவை, மதிப்பில்லாதவை, குறைவானவை, சிறப்பில்லாதவை எனக் கருத்தாக்கம் செய்யப்பட்டிருக்கிறது... அதே போல தாலாட்டில் தொடங்கி ஒப்பாரி வரைக்கும் விரவிக் கிடக்கும் பாடல்களுக்கும் அங்கீகாரம் கிடையா" என்று தமிழ்க் கவிதை எழுத்தின் அரசியல் என்ற கட்டுரையில் குறிப்பிடும் ஆசிரியர் "வினையே ஆடவர்க்கு உயிர் மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிர்" எனும் சங்ககாலக் காதல் கவிதையில் உள்ள பெண்ணடிமைத்தனத்தைச் சுட்டுகிறார். நிலவுடைமைச் சமூகத்திலிருந்து முதலாளித்துவம் வந்த பிறகு, மரபுக் கவிதைத் தளத்திலிருந்து, புதுக்கவிதைத் தளத்திற்கு மாறுதல்களை ஏற்படுத்திக் கொண்டது என்கிறார்.
"இந்திய தேசம்: வேர்களும், கிளைகளும்" என்ற கட்டுரையில், ஆங்கிலேயர் மீதான பெருவாரி மக்களின் எதிர்ப்புணர்வை "இந்திய விடுதலைப் போராட்டம்" என்கிற பெயரில் திரட்டிக் கொண்டு, இந்துத்துவம் கோலோச்சும் பார்ப்பனிய தேசமாகக் கட்டமைத்து விடும் முயற்சியில் ஒரு பொய்யான தேசத்தைப் பல புனைவுகளைக் கொண்ட கற்பிதங்களால் உருவாக்கி நடைமுறைப்படுத்த முயல்கிறது பார்ப்பனீயம். அவர்களின் இந்திய தேசம் என்பது இந்துப் பார்ப்பனிய தேசம்தான் என்கிறார்.
திருவள்ளுவர் காலந்தொட்டு பார்ப்பனிய எதிர்ப்பு உள்ளதைச் சுட்டும் ஆசிரியர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகப் பார்ப்பனியம் இச்சமூகத்தில் தன் வேர்களைப் பரப்பியிருந்தாலும், அவ்வேர்களின் முனைகள் ஆபத்தானவை என்பதை அடையாளம் காட்டிய போக்குகள் பிற்காலத்தில்தான் வெளிப்படுகின்றன. பூலே, அயோத்திதாசர் (Ayothidasar), பெரியார் (Periyar), அம்பேத்கர் (Dr.Ambedkar) போன்றவர்கள் பார்ப்பனீயத்தைத் தோலுரித்துக் காட்டியவர்களில் முதன்மையானவர்கள் என்கிறார் ஆசிரியர். பெரியார் இந்திய தேசத்தை ஏற்றுக்கொள்ள மறுப்பதற்கான காரணம் பார்ப்பனியத்தை எதிர்க்க வேண்டும் என்பதற்கே ஒழிய, மொழி வழித் தேசிய இனங்கள் குறித்த பார்வையினால் அல்ல என்றும் குறிப்பிடுகிறார்.
மொத்தத்தில் தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய ஒரு நூல் இது.
("கீழிருந்து எழுகிற வரலாறு" ஆசிரியர் - மகாராசன், வெளியீடு: பரிசல், எண்1. இந்தியன் வங்கி காலனி, வள்ளலார் தெரு, சூளை மேடு, சென்னை - 94. விலை ரூ.50

                                                நன்றி: தமிழ் கூடல்.காம்