சனி, 13 அக்டோபர், 2018

இன்னுமோர் சாதிய ஆணவப் படுகொலை: சாதிய முகத்தைத் தோலுரிக்கும் அமிர்தவர்சினி.

என் பெயர் அமிர்தவர்சினி. எல்லோரும் அமிர்தா என்று அழைப்பார்கள். அப்பா மாருதிராவ், அம்மா கிரிஜாராணி. வீட்டிற்கு ஒரே மகள். உடன் பிறந்தவர்கள் யாரும் இல்லை. தெலுங்கானா மாநிலத்தில் உள்ள நலங்கொண்டா அருகில் உள்ளது மிராளுகுடா. இங்குதான் என் அப்பா தனது தொழிலை ஆரம்பித்தார். ரேசன் கடையில் மண்ணெண்ணை விநியோகஸ்தராக தொழிலை தொடங்கிய என் அப்பா மிகப்பெரிய செல்வாக்கு மிக்க மனிதராக திகழ்ந்தார். அரசியல் செல்வாக்கு, பண பலம், தொழில் பலம் என்று எல்லாவற்றிலும் ஆதிக்கம் மிக்க மனிதராக தன்னை வளர்த்துக் கொண்டார். நாங்கள் வைசியா சமூகத்தைச் சேர்ந்தவர்கள். சாதி என்றால் என்ன என்றே எனக்கு தெரியாது.

அப்போது நான் 7ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். நான் எல்லோரிடமும் அன்பாக பேசக்கூடியவள். ஒருமுறை என் அப்பா என்னை அழைத்து நீ யாரிடம் வேண்டுமானாலும் பேசு, பழகு. காசு இருக்கிறதோ இல்லையோ அதை எல்லாம் பார்க்காமல் எல்லோரிடமும் நட்பு வைத்துக் கொள். ஆனால் எஸ்சி சமூகத்தில் இருக்கிறவரோடு பேசக்கூடாது. அவர்களிடம் எந்த உறவும் வைத்துக் கொள்ளக்கூடாது. அது நம் குடும்பத்திற்கு கெடுதல். அதைவிட வேறு அசிங்கம் எதுவும் இருந்துவிட முடியாது என்று கூறினார். எனக்கு எஸ்சி என்றால் என்ன என்றே தெரியாது. அவர்கள் எப்படி இருப்பார்கள்? ஏன் அப்பா அவர்களோடு பேசக்கூடாது என்கிறார்? என்கிற கேள்வி எனக்குள் வந்தது. ஆனால் ஒரு கட்டத்தில் என் அப்பாவிடம் அந்த பதிலை கேட்க முடியவில்லை.

2011ம் ஆண்டு என்று நினைக்கின்றேன். நான் 9ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். பிரனய் அப்போது 10ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். அவன் அன்பாக பேசக்கூடியவன். நாங்கள் இருவரும் சிறுவர்கள் தான். அந்த வயதில் சக நண்பர்களுடன் குறும்புத்தனமும் கேலியும் கிண்டலுமாக இருப்போம். ஆனால் பிரனய் அதையும் கடந்து பாசத்துடன் பேசுவான். அந்த பாசத்தை எப்படி சொல்வது? எல்லோரும் சொல்வார்கள். காதலன் தன்னுடைய தந்தை போன்று தம்மை கவனித்துக் கொண்டான் என்று சொல்வார்கள். ஆனால் பிரனய் அப்படி அல்ல, ஒரு குழந்தையை போன்று பார்த்துக் கொண்டான். அவன் எல்லோரிடமும் அன்பாகத்தான் பேசுவான். அவனுக்கு தெரிந்தது எல்லாம் கனிவும் அன்பும் தான். ஒரு கடுஞ்சொல் கூட அவனிடத்தில் தென்படாது. நாங்கள் நட்போடுதான் பேசி வந்தோம். எங்களுக்குள் எந்த காதலும் இல்லை. இந்த நட்பு என் அப்பாவை கடுமையாக பாதித்தது. என்னை பள்ளிக்கூடத்தைவிட்டு நிறுத்திவிட்டு வேறு பள்ளியில் சேர்த்துவிட்டார்.

நான் 11ம் வகுப்பு படிக்கின்ற போது பிரனய் 12ம் வகுப்பு படித்து வந்தான். ஒரே பகுதி என்பதனால் சந்தித்துக் கொண்டோம். இதனை அறிந்த என் அப்பா, என்னை வீட்டிற்கு அழைத்துச் சென்று தனி அறையில் வைத்து பூட்டினார். கன்னத்தில் கடுமையாக தாக்கினார். நான் யாரோடு உறவு வைத்துக் கொள்ளக்கூடாது என்றேனோ, நீ அவர்களோடு உறவு வைத்திருக்கிறாய். நீ செய்த காரியத்தினால் நம் வம்சமே அழிந்து போய்விடும். கீழ்சாதி பயலோட உனக்கு என்ன பேச்சு வேண்டியிருக்கிறது என்று கூறி கடுமையாக தாக்கினார். எனது அலைபேசி பறித்துக் கொள்ளப்பட்டது. உறவினர்களோடு நண்பர்களோடு எனக்கு பேச அனுமதியில்லை. இந்த சித்திரவதை 6 மாதம் தொடர்ந்தது.

வெளியே எங்கு சென்றாலும் உடன் ஆட்கள் வருவார்கள். எல்லாம் இருந்தும் மனம் வெறுமையாக இருக்கும். வீட்டில் யாரும் என்னோடு பேச மாட்டார்கள். நானே பேச முயற்சி செய்தாலும் மௌனமாக கடந்து சென்றுவிடுவார்கள். ஒவ்வொரு மணி நேரமல்ல, ஒவ்வொரு நிமிடமும் பிரனயும் அவனது சாதியும் குறித்து இழிவாகப் பேசுவார்கள். மாலா, மாதிகா சாதியில் பிறந்தவர்கள் எல்லாம் கேவலமானவர்கள் என்றெல்லாம் என் அப்பா விமர்சித்து பேசுவார். ஒரு வருடம் என் படிப்பை நிறுத்தி வீட்டில் சிறை வைக்கப்பட்டு உறவினர்களாலும் குடும்பத்தினர்களாலும் நான் அனுபவித்த சித்திரவதையை யாரும் அனுபவித்திருக்க மாட்டார்கள். தினந்தோறும் கண்ணீரும் வலிகளும் நிறைந்த நாட்களாக நகர்ந்தன.

நான் பிரனயோடு நட்புடன் இருப்பதனால் ஒரு வருடப் படிப்பினையே என் அப்பா நிறுத்திவிட்டார். பிரனய், ஹைதரபாத்தில் பி.டெக் மூன்றாம் ஆண்டு படித்து வந்தான். என் அப்பாவிடம் கெஞ்சி கேட்டு என் படிப்பை கெடுத்துவிடாதீர்கள் என்று அழுதேன். வேறு வழியில்லாமல் என் அப்பா என்னை ஹைதரபாத்தில் பி.டெக் முதலாமாண்டு சேர்த்துவிட்டார்.

எனக்கு ஹைதரபாத்தில் பி.டெக் படிக்கும் போதுதான் பிரனய் மீது நட்புடன் இருந்த எனது அன்பு காதலாக மாறியது என்று கருதுகிறேன். இருவரும் காதலை பரிமாறிக் கொண்டோம். கடந்த 2016ம் ஆண்டு நானும் என் சித்தப்பா மகள்களும் மற்றும் உறவினர்களும் ஹைதரபாத்தில் சினிமாவிற்கு சென்றிருந்தோம். சினிமாவிற்கு செல்வதற்கு முன்பு நான் பிரனயை அலைபேசியில், நீயும் படத்திற்கு வா என்று அழைத்திருந்தேன். அவனும் வந்திருந்தான். இதனை கவனித்த என் சித்தப்பா மகள், எனக்கு தெரியாமல் அலைபேசியில் என் சித்தப்பா சரவண்குமாருக்கு தகவலை தெரிவித்தாள். படம் பார்த்துக் கொண்டிருக்கும் போது தியேட்டருக்கு வந்த என் சித்தப்பா சரவண்குமார் என்னை கடுமையாக அடித்தது மட்டுமல்லாமல், பிரனய் சட்டையை பிடித்து இழுத்து எல்லோரும் பார்க்கும் விதமாக அவனது கன்னத்தில் அறைந்து சாதி ரீதியாக இழிவுபடுத்தி பேசினார். பிரனய் நிலைகுலைந்து பரிதாபமாக நின்று கொண்டிருந்தான். அந்த காட்சியை இன்று நினைத்தாலும் நடுங்கிப் போவேன். எல்லா அவமானங்களையும் எனக்காக தாங்கிக் கொண்டான்.

நான் மிராளுகுடாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டேன். அங்கு ஏற்கனவே எனது உறவினர்கள் 20 – 25 பேர் இருந்தனர். எல்லோரும் என்னை சூழ்ந்து கொண்டு அடித்தனர். ஸ்டூல், உருட்டுக்கட்டை என்று கையில் கிடைத்த பொருட்களை எல்லாம் எடுத்துக் கொண்டு என்னை தாக்கினார்கள். உனக்கு நம்ம சாதியில் எந்த பையனும் கிடைக்கலயா? மாலா தான் கிடைத்தானா? என்று என்னை ஆபாசமாக, அருவருக்கத்தக்க வகையில் பேசினார்கள். உலகத்தில் உள்ள எல்லா கெட்டவார்த்தைகளையும் என் உறவினர்கள் தெரிந்து வைத்திருப்பார்கள் என்று கருதுகிறேன். அதுபோன்ற ஒரு ஆபாசமான குப்பை பேச்சினை, நாற்றமடிக்கும் பேச்சினை அப்போதுதான் முதன்முறையாக எதிர்கொண்டேன். ஒவ்வொரு பேச்சிலும் ஒவ்வொரு வார்த்தையிலும் என்னை பாலியல் ரீதியாகவும் பிரனயை சாதி ரீதியாகவும் இழித்து பழித்து பேசினர். கடுமையாக தாக்கப்பட்ட நான் காயத்துடன் ஆடை கிழிக்கப்பட்டு துவண்டு கிடந்தேன். அந்த கணம் செத்துவிட வேண்டும் போல் தோன்றியது. ஆனால் பிரனய் உயிர்ப்பினை கொடுத்துக் கொண்டிருந்தான். அவனது நினைவு, அவனது பேச்சு எனக்குள் மிகப்பெரிய பலத்தை ஏற்படுத்தியிருந்தது.

மறுபடியும் வீட்டிச்சிறை. தாக்குதல், இழிவுபடுத்தப்படுதுல் என்று 20 நாள் இந்த கடும் சித்திரவதை நடந்தது. எனது படிப்பினை நிறுத்திவிட்டனர். ஆனால் 15 நாட்களுக்கு ஒரு நாள் என்று மட்டும் கல்லூரிக்கு சென்று வந்தேன். உடன் என் அப்பாவும் வருவார்.

பிரனயின் தந்தைக்கு ஹைதரபாத்திலிருந்து மிகப்பெரிய ஒரு தாதா பேசினான். உன் மகன் உயிரோடு இருக்க வேண்டுமென்றால் மாருதிராவ் மகளோடு பேசக்கூடாது. அவனை கொன்றுவிடுவேன் என்று மிரட்டினான். இதனால் பயந்து போன பிரனயின் குடும்பத்தினர் பிரனயின் படிப்பை நிறுத்திவிட்டு அவனை அழைத்துக் கொண்டு உறவினர் ஒருவர் வீட்டில் யாருக்கும் தெரியாமல் பாதுகாப்பில் விட்டனர்.

இதற்கிடையில் பிரனயின் குடும்பத்தினரை மிரட்டிய அந்த தாதா போலீஸ் என்கவுண்டரால் கொல்லப்பட்டான். அவன் இறந்த பிறகு தான் பிரனயை மிராளுகுடாவிற்கு அழைத்து வந்தார்கள்.

என் படிப்பு நின்றுவிட்டது. பிரனய் படிப்பும் நின்றுவிட்டது. அவனது குடும்பம் உயிருக்கு பயந்து வெளியூரில் தஞ்சம் அடைகிற நிலை. இதெல்லாம் எதற்காக நடக்கிறது? ஆழமாக யோசித்துப் பார்த்தேன். ஏழை, பணக்காரன் என்று வித்தியாசம் பார்க்க வேண்டாமென்று சொல்லி வளர்த்த என் அப்பா, எஸ்சி மக்களை மட்டும் மனிதர்களாக பார்க்கவில்லை? சாதிதான் இந்த எல்லா சதிக்கும் காரணம் என்பதை தெளிவாக உணர்ந்து கொண்டேன். என்ன நடந்தாலும் சரி என் வாழ்க்கை என்பது பிரனய் கூட தான் இருக்க வேண்டும் என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன்.

பிரனய் மீது அன்பு வைத்தது சமூக குற்றமா? 7 ஆண்டுகள், எனது 14 வயதிலிருந்து சாதி ரீதியான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறேன். நீங்கள் கேட்கலாம் நீ தான் வைசியா சமூகத்தைச் சேர்ந்தவள். உனக்கு என்ன சாதி ரீதியான சித்திரவதை என்று கேட்கலாம். என் மீது நடந்தது சாதி ரீதியான சித்திரவதை தான். என் பிரனயிக்கு நடக்க வேண்டிய சித்திரவதையை நான் தாங்கிக் கொண்டேன். எனக்கு நடக்க வேண்டிய சித்திரவதையை பிரனய் ஏற்றுக் கொண்டான். ஆகவே நான் தலித்தாக பிறக்காமல் இருக்கலாம். ஆனால் தலித்துகள் மீது நடைபெறக்கூடிய சித்திரவதையை நேரடியாக எதிர் கொண்டவள். அதனால் தான் சொல்கிறேன் என் மீதான சித்திரவதை என்பது சாதி ரீதியான சித்திரவதை.

எல்லாவற்றையும் உதறிவிட்டு 2018ம் ஆண்டு ஜனவரி 30ம் தேதி பிரனயை திருமணம் செய்து கொண்டேன். என் அப்பா மாருதிராவ், பிரனயையும் அவனது குடும்பத்தினரும் என்னை கடத்திச் சென்றதாக மிராளுகுடா 1 டவுன் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். நான் காவல்நிலையத்தில் நேரடியாக ஆஜராகி என்னை யாரும் கடத்தவில்லை. நான் பிரனயை திருமணம் செய்து கொண்டேன் என்று விளக்கமளித்தேன். போலீசார் இருதரப்பினரையும் அழைத்து சமாதானம் செய்து வைத்தனர். என்னை என் கணவர் பிரனயோடு வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

பிரனயின் தந்தை எல்ஐசியில் அதிகாரியாக உள்ளார். கடந்த பிப்ரவரி 2018 மாதத்தில் பிரனயின் அப்பாவை கேத்தப்பள்ளி காவல்நிலைய சார்பு ஆய்வாளர், நீ எல்ஐசி ஏஜன்டாமே, பலரிடம் பணத்தை வாங்கிக் கொண்டு ஏமாற்றிவிட்டாயாமே என்று பொய்யான புகாருக்கு காவல்நிலையத்திற்கு அழைத்து வந்த கடும் சித்திரவதையை செய்தார். நானும் பிரனயும் ஹைதரபாத்திற்கு சென்று ஐஜியிடம் நடந்ததை சொன்னோம். ஐஜி, நலங்கொண்டா எஸ்.பி. சீனிவாசராவிடம் இதுபோன்று நடவடிக்கை கூடாது. உடனடியாக பிரனயின் தந்தை விடுவிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட போலீசார் பிரனயின் அப்பாவை வெளியே விட்டனர்.

கடுமையான அச்சுறுத்தல் இருந்தாலும் பிரனய் என் மீது அதீத அன்பினை காட்டி வந்தான். ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி எங்களுக்கு ரிசப்சன் நடந்தது. மிராளுகுடா பகுதியில் பேனர் வைத்து கோலகலமாக கொண்டாடினோம். ஆனால் அன்றே எங்களை கொல்லுவதற்கு கூலிப்படையைச் சேர்ந்த சுபாஷ்குமார் சர்மா வந்திருக்கிறான். அந்த விபரம் எங்களுக்கு பின்னால் தான் தெரிய வந்தது.

நான் கர்ப்பமடைந்திருந்தேன். கடந்த 14 செப்டம்பர் 2018 அன்று ஜோதி மருத்துவமனைக்கு நானும் என் கணவர் பிரனயும் பிரனயின் அம்மாவும் சென்றிருந்தோம். என் உடல் பரிசோதனை முடிந்து திரும்புகிற போது, மருத்துவமனையின் வாசலில் பிற்பகல் 1.30 மணியிருக்கும் ஒரு சத்தம் கேட்டது. நானும் பிரனயின் அம்மாவும் திரும்பிப் பார்க்கிறபோது குத்துப்பட்டு கிடந்த பிரனயை சுபாஷ்குமார் சர்மா மறுபடியும் கத்தியால் குத்தினான். அந்த கொலைகாரனின் முகத்தைப் பார்த்தேன். பிரனய் இரத்த வெள்ளத்தில் கிடந்தான். அள்ளி எடுக்கின்றபோது உயிர் பிரிந்திருந்தது.

ஒரு கணம் எல்லாமும் முடிந்து போனது. இந்த கேடுகெட்ட சாதி ஒரு உயிரை பறித்து வீதியில் வீசி எறிந்தது. மூச்சு நின்றுவிடும் போல் இருந்தது. என் வயிற்றில் வளரும் குழந்தைக்கு தன்னுடைய அப்பாவின் மரணவலி கேட்டிருக்கும். இதுபோன்ற கொடுமை யாருக்கும் வராது.

என்று கூறிய அமிர்தாவிற்கு என்ன சொல்வதென்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தேன். பக்கத்தில் அம்பேத்கரும் பிரனயும் புகைப்படத்தில் எல்லாவற்றையும் மௌனமாக கேட்டுக் கொண்டிருந்தனர்.

பிரனயின் மனைவியும் அம்பேத்கரின் பேத்தியுமான அமிர்தாவின் கண்களில் அடர்த்தியான உறுதி தெரிந்தது. அந்த உறுதி இழந்த எல்லாவற்றையும் கொண்டுவந்துவிடும் என்று நம்புகிறேன்.

எவிடன்ஸ் கதிர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக